உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் வேல் கம்புடன் மதுரை வைகையில் இறங்க புறப்பட்டார் அழகர்

கண்டாங்கி பட்டு உடுத்தி கையில் வேல் கம்புடன் மதுரை வைகையில் இறங்க புறப்பட்டார் அழகர்

அழகர்கோவில், : கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன், பக்தர்களின் கோவிந்தா கோஷங்களுக்கு மத்தியில் மதுரை வைகை ஆற்றில் நாளை (ஏப்., 23) காலை இறங்க அழகர் மலையில் இருந்து தங்கப்பல்லக்கில் புறப்பட்டார் கள்ளழகர்.மதுரை மாவட்டம் அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வு கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருள்வது. விழா துவக்க நாளான ஏப்., 19 பெருமாள் திருக்கல்யாண மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.மதுரை வைகையாற்றில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்க நேற்று மாலை 6:00 மணிக்கு கள்ளழகர் வேடம்பூண்டு கண்டாங்கி பட்டு உடுத்தி, கையில் வேல் கம்புடன் தங்கப்பல்லக்கில் புறப்பட்டார்.இன்று(ஏப்.,22) காலை 6:00 மணிக்கு மதுரை புதுார் மூன்றுமாவடியில் கள்ளழகருக்கு எதிர்சேவை நடக்கிறது. இரவு 8:00 மணிக்கு தல்லா குளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் திருமஞ்சனமாகிறார்.பின் தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளி ஸ்ரீவில்லிப்புத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சூடி, வெட்டிவேர் சப்பரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். நாளை (ஏப்., 23) அதிகாலை 5:51 மணிக்கு மேல் காலை 6:10 மணிக்குள் தங்கக்குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருள்கிறார்.ஏப்., 24 வண்டியூர் வீரராகவபெருமாள் கோயிலில் புறப்பாடாகி ஏகாந்த சேவை நடக்கும். பின்னர் சேஷ வாகனத்தில் தேனுார் மண்டபத்தில் கள்ளழகர் எழுந்தருள்வார்.அங்கிருந்து கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் வழங்குவார். இரவு 10:00 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் இரவு முழுவதும் தசாவதாரம் நிகழ்ச்சி நடக்கும். அங்கிருந்து ஏப்., 25 காலை 6:00 மணிக்கு மோகினி அவதாரத்துடன் தல்லாகுளம் புறப்படுவார்.ஏப்., 26 அதிகாலை 2:30 மணிக்கு பூப்பல்லக்கில் எழுந்தருள்வார். ஏப்., 27 அதிகாலை அப்பன் திருப்பதி ஜமீன்தார் மண்டபத்தில் சுவாமி எழுந்தருள்வார்.அன்று காலை 10:30 மணிக்கு மேல் 11:00 மணிக்குள் அழகர்கோவில் திரும்புவார். ஏப்., 28 உற்ஸவ சாந்தி நடக்கும்.அழகர்கோவிலிருந்து புறப்பட்ட கள்ளழகர் வழிநெடுகிலும் அமைக்கப்பட்டுள்ள 483 மண்டகபடிகளில் எழுந்தருள்வார். பக்தர்கள் காணிக்கை செலுத்த வசதியாக 39 உண்டியல்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் வெங்கடாசலம், துணைக் கமிஷனர் கலைவாணன் மற்றும் அலுவலர்கள் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை