உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகள் 5 ஆண்டுகளில் 69 விபத்தில் 131 பேர் பலி உயர்நீதிமன்றத்தில் தகவல்

விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகள் 5 ஆண்டுகளில் 69 விபத்தில் 131 பேர் பலி உயர்நீதிமன்றத்தில் தகவல்

மதுரை : விருதுநகர் மாவட்ட பட்டாசு ஆலைகளில் 2019 முதல் 5 ஆண்டுகளில் 69 விபத்துக்கள் நடந்துள்ளன; 131 பேர் இறந்துள்ளனர் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் எஸ்.பி., அறிக்கை சமர்ப்பித்தார்.விருதுநகர் மாவட்டத்தில் சில பட்டாசு ஆலைகளில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டோர் சிலர் தரப்பில் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிடக்கோரி மனுக்கள் தாக்கலாகின.நீதிபதி பி.புகழேந்தி: விருதுநகர் மாவட்டத்தில் 1087 பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள், 2963 சில்லரை விற்பனை நிலையங்கள் உள்ளன. அவற்றின் மூலம் மக்கள் வருவாய் ஈட்டுகின்றனர் என கலெக்டர் அறிக்கை அளித்துள்ளார். தொழிலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நிபந்தனைகளுடன் அத்தொழிற்சாலைகளுக்கு உரிமம் வழங்கப்படுகிறது. சில யூனிட்களில் நிபந்தனைகளை பின்பற்றாததால், விபத்துகள் நடக்கின்றன. தீ விபத்துகளை தடுக்க மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையில் பாதுகாப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 2019 முதல் தற்போதுவரை 69 விபத்துக்கள் நடந்துள்ளன; 131 பேர் இறந்துள்ளனர்; 146 பேர் காயமடைந்தனர் என மாவட்ட எஸ்.பி.,அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.உராய்வு, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமை, பணியாளர்கள், போர்மேன்களின் அலட்சியம் மற்றும் வெடிமருந்துகளை தவறாக கையாள்வதால் விபத்து ஏற்படுகிறது. கதவுகளை மூடும்போது, ரசாயனங்களை தவறாக கையாளும்போது உராய்வு ஏற்படுகிறது. 1244 போர்மேன்கள், 10 ஆயிரத்து 304 தொழிலாளர்களுக்கு விபத்து தடுப்பு பயிற்சியை அரசு தரப்பு அளித்துள்ளது.இந்தியாவில் 58 மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக மத்திய அரசு கண்டறிந்துள்ளது. அதில் விருதுநகர் மாவட்டமும் ஒன்று. மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதில் பட்டாசு ஆலைகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. தீ விபத்துகளைத் தடுக்க, ஏழை தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதி செய்ய முறையான வழிமுறைகள் இல்லை என தோன்றுகிறது. விபத்துக்களை தடுக்க மாவட்ட பாதுகாப்புக் குழு, திறம்பட செயல்படுவதில் முன்னேற்றமும் இல்லை. உரிம நிபந்தனைகள் கடைப்பிடிக்கப்படுகிறதா, இல்லையா என்பதை உறுதிப்படுத்த எந்த வழிமுறையும் இல்லை.'டான்பாமா' தரப்பு, 'எங்கள் சங்கத்தில் 280 உறுப்பினர்கள் உள்ளனர். நிபந்தனைகள், விதிமுறைகளை பின்பற்றி யூனிட்களை முறையாக நடத்துகின்றனர். விபத்துக்கள் தடுக்கப்பட்டுள்ளன. இத்தொழிற்சாலைகளில் 5 ஆண்டுகளில் 4 விபத்துக்கள் மட்டுமே நடந்துள்ளன; 3பேர் இறந்தனர்,' என தெரிவித்தது.கலெக்டர் 1087 ஆலைகள் உள்ளன என குறிப்பிடுகிறார். சங்கங்கள் எதனுடனும் இணைக்கப்படாத பிற தொழிற்சாலைகள் இருப்பது தெரிகிறது. இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்காக ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை