மதுரை, : 'டிஜிட்டல் கிராப் சர்வே' எனும் பயிர் சாகுபடி விவரபதிவு பணியை கிராம உதவியாளர்களை பயன்படுத்தி முறையாக செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.வருவாய்த் துறையின் முக்கிய பணியில் ஒன்று பயிர்சாகுபடி விவரங்களை பதிவு செய்யும் பயிராய்வுப் பணி. இதற்கென அரசு வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. ஆனால் அது முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. ஆரம்ப காலத்தில் கிராம கர்ணம் பதவி இருந்தபோது கிராம உதவியாளர்கள் துணையுடன் இப்பணி முறையாக நடந்தது. 1980ல் கிராம கர்ணம் பணி ஒழிக்கப்பட்டு, சில ஆண்டுகள் வருவாய் ஆய்வாளர்கள் (ஆர்.ஐ.,) இப்பணியை மேற்கொண்டனர். அப்போது பணிப்பளுவால் நிலங்களுக்குச் செல்லாமலேயே பயிர்பதிவு முறை கையாளப்பட்டது.1984ல் கிராம நிர்வாக அலுவலர்கள் (வி.ஏ.ஓ.,) நியமனம் செய்யப்பட்ட பின் பயிராய்வுப் பணி முன்புபோல மீண்டும் நடந்தது. அதன்பின் 1991ல் வி.ஏ.ஓ.,க்களுக்கான வீட்டுவரி, தொழில் வரிவசூல் பணி ஊராட்சி உதவியாளர் வசம் சென்றது. தாலுகாக்கள் பிரிக்கப்பட்டன. இதனால் வருவாய் அலுவலர்கள் பணிப்பளு குறைந்துள்ளது.இந்த நிலையிலும்கூட பயிர்சாகுபடி விவரப்பதிவு அரசு வழிகட்டு நெறிமுறைப்படி முறையாக நடப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதனால் தரிசு நிலம், சீமைக்கருவேல மரங்கள்அடர்ந்த பகுதிகூட சாகுபடி நிலமாக காட்டப்பட்டு, பயிர் இன்சூரன்ஸ் திட்டத்திற்கு உட்படுத்தப்பட்டன.சில மாவட்டங்களில் கிராம பட்டாக்களின் மொத்த அளவைவிட, இன்சூரன்ஸ் செய்த நிலத்தின் அளவு கூடுதலாக இருந்துள்ளது. இந்தச் சூழலில்தான் மத்திய, மாநில அரசுகள் 'டிஜிட்டல்' முறையில் பயிர்சாகுபடி விவரத்தைப் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளன. இதில் வி.ஏ.ஓ., ஆர்.ஐ., கிராம உதவியாளர்கள் சாகுபடி நிலங்களுக்கு சென்று 'அலைபேசி செயலி'யில் தங்கள் படத்துடன் நிலத்தை பதிவு செய்ய வேண்டும். ஆனால் பணிப்பளு, நிதியிழப்பை காரணம்காட்டி 'டிஜிட்டல் பயிர்சாகுபடி விவரபதிவை மேற்கொள்ள மறுத்து வருகின்றனர்.டிஜிட்டல் முறை இல்லாததால், பதிவு துல்லியமாக இல்லை. ஆக்கிரமிப்பு, கனிம வளச்சுரண்டல், நீர்வழித்தடம் அழிவதை உடனே அறிய முடியவில்லை. கிராம உதவியாளர்கள் வலியுறுத்தல்
தமிழ்நாடு கிராம உதவியாளர் முன்னேற்ற சங்க தலைவர் கணேஸ்வதி, செயலாளர் சிந்தியா கூறியதாவது: பயிர்சாகுபடி விவரப்பதிவை, 5 ஆயிரத்துக்கும்மேலான கிராம உதவியாளரிடம் கிராம படம், புலப்படம், அடங்கல் போன்றவற்றை ஒப்படைத்து பணியை பகிர்ந்தளிக்கலாம். கிராம உதவியாளர்கள் மகளிர் உரிமைத் திட்டம், ஓட்டுச் சாவடி அலுவலர் பணிகளை செய்ததன் மூலமும் பணித்திறனோடு உள்ளனர். தமிழகத்தில் விவசாயம் நடைபெறும் 9 ஆயிரம் கிராமங்களில் கிராம உதவியாளர்களில் வி.ஏ.ஓ., பதவிக்கு தகுதியுள்ளோர், பட்டப்படிப்பு முடித்தோரை பயன்படுத்தி 'டிஜிட்டல் கிராப் சர்வே' பணியை செயல்படுத்தலாம், என்றனர்.