| ADDED : ஜன 03, 2024 06:28 AM
மதுரை: மதுரையில் நந்தி சிலை, புதுமண்டபம் எதிரிலுள்ள வரலாற்று சிறப்பு மிக்க ராயகோபுரம் ஆக்கிரமிப்புகளால் கவனிப்பாரற்று கிடக்கிறது.400 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட ராயகோபுரம் முழுமை பெறாமல் துாண், சுவர்களுடன் நின்றுவிட்டது. காலப்போக்கில் முழுமை பெறாத கோபுரமே கலையழகு தந்தது. ஆரம்ப காலத்தில் தெருவோர வியாபாரிகள் இதன் முன்பாக தினமும் வந்து பொருட்களை விற்ற காலம் மாறி தற்போது நிரந்தரமாக ராயகோபுரத்தை ஆக்கிரமித்து விட்டனர். தரையில் இருந்து ஆறடி உயரம் வரை ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்களால் மறைக்கப்பட்டுள்ளது.கோபுரத்தின் மேல்பகுதியில் நீலநிற தார்ப்பாலின் சீட் பரப்பப்பட்டு அதன் அழகை மறைக்கிறது. தற்போது மீனாட்சியம்மன் கோயிலைச் சுற்றி வரும் வெளிநாட்டு, வெளிமாநில பயணிகள் ஆக்கிரமிப்புகளை தாண்டி ராயகோபுரத்தின் மேற்புற துாண்களின் அழகை அண்ணாந்து பார்த்து ரசித்துச் செல்கின்றனர்.தற்போது புதுமண்டபத்தில் தனியார் நன்கொடையுடன் சீரமைப்பு வேலை நடக்கிறது. இந்நிலையில் ராயகோபுரம் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாநகராட்சியும், அறநிலையத்துறையும் முன்வரவேண்டும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ராயகோபுரத்தைச் சுற்றிலும் மின்விளக்குகள் ஒளிரச் செய்து கோபுரத்தின் வரலாற்று குறிப்புகளை அறிவிப்பாக வைக்க வேண்டும். புதுமண்டபத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் ராயகோபுரத்தின் அழகையும் பார்த்து ரசிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.