| ADDED : செப் 28, 2024 05:35 AM
மதுரை : மதுரையில் போலீஸ் விசாரணையில் சிறுவன் இறந்த வழக்கில் இழப்பீடு ரூ.20 லட்சம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதால் அரசுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை முடித்து வைத்தது.மதுரை கோச்சடை ஜெயா ஏற்கனவே தாக்கல் செய்த மனு:
ஒருவரது வீட்டில் நகை திருட்டு குறித்து மதுரை எஸ்.எஸ்.காலனி போலீசில் 2019 ல் புகார் அளிக்கப்பட்டது. எனது 17 வயது மகனை எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். எங்கள் வீட்டில் சோதனையிட்டனர். நகை எதுவும் கிடைக்கவில்லை. நகை திருடுபோனதற்கு மகன்தான் பொறுப்பு என ஒப்புக்கொள்ளுமாறு போலீசார் நிர்பந்தித்தனர். அவரை சட்டவிரோதமாக காவலில் வைத்து துன்புறுத்தினர். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகன் 2019 ஜன.,24 ல் இறந்தார். இவ்வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டது. சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிராக கீழமை நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி., இறுதி அறிக்கை தாக்கல் செய்தது. எங்களுக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.2023 ஆக.,18ல் தனி நீதிபதி: மனுதாரர் குடும்பம் ரூ.25 லட்சம் இழப்பீடு பெற தகுதி உண்டு. ஏற்கனவே அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியுள்ளது. மீதம் ரூ.20 லட்சத்தை தமிழக அரசு வழங்க வேண்டும். கீழமை நீதிமன்றத்தில் சம்பந்தப்பட்ட போலீசாருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது. அதன் இறுதி முடிவை பொறுத்து இழப்பீடு தொகையை யாரிடம் வசூலிப்பது என்பது குறித்து அரசு முடிவெடுக்கலாம். மனுதாரர் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவது குறித்து தமிழக உள்துறை செயலர்தான் முடிவெடுக்க இயலும். இவ்வாறு உத்தரவிட்டார். இதை எதிர்த்து உள்துறை செயலர், டி.ஜி.பி.,மேல்முறையீடு செய்தனர்.ஜூன் 4 ல் நீதிபதிகள் அமர்வு,'ரூ.20 லட்சத்தை தேசியமய வங்கியில் 4 வாரங்களில் அரசு டெபாசிட் செய்ய வேண்டும்,' என உத்தரவிட்டது.இதை நிறைவேற்றாததால் தமிழக உள்துறை முதன்மைச் செயலர் தீரஜ்குமார், டி.ஜி.பி.,சங்கர்ஜிவால் மீது நீதிமன்ற அவமதிப்பின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி ஜெயா மனு செய்தார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: கலெக்டர் பெயரில் உள்ள வங்கி கணக்கில்ரூ.20 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது எனக்கூறி ஆவணம் தாக்கல் செய்தது. இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்தனர்.