உற்சாகமான அரசு பஸ் டிரைவரா கண்காணிக்க பிரீத்திங் அனலைசர்
மதுரை: மதுரை அரசு போக்குவரத்து கழக ஓட்டுனர், நடத்துனர்களை பரிசோதனை செய்ய 'பிரீத்திங் அனலைசர்' கருவிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.மது அருந்தியபின் வாகனம் ஓட்டுவது சட்டப்படி குற்றம் என்பதால் போக்குவரத்து போலீசார் வாகன ஓட்டிகளை அவ்வப்போது 'பிரீத்திங் அனலைசர்' கருவியில் ஊதச் சொல்லி பரிசோதித்து நடவடிக்கை எடுக்கின்றனர். இந்நடைமுறை அரசு போக்குவரத்துக் கழகத்திலும் நடைமுறைக்கு வர உள்ளது. ஓட்டுனர், நடத்துனர்கள் பணியின்போது மது அருந்தி வருவதாக அவ்வப்போது புகார்கள் வருகின்றன. பயணிகளின் பாதுகாப்பு கருதி மதுரை கோட்டம் சார்பில் 58 'பிரீத்திங் அனலைசர்' கருவிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. பணிக்கு வரும் ஓட்டுனர், நடத்துனர்களை இக்கருவியில் ஊதச் செய்து பரிசோதிப்பர். பஸ்சை இயக்கும் தகுதியுடன் உள்ளாரா என்பதை துல்லியமாக இக்கருவி காட்டிக் கொடுத்துவிடும். இதன் அடிப்படையில் பணி செய்ய அனுமதிக்கப்படுவர்.அதிகாரிகளிடம் கேட்டபோது, ''மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலங்களின் டெப்போக்கள், பஸ்ஸ்டாண்டுகளில் ஓட்டுனர்கள் பஸ்சில் ஏறும் முன் இக்கருவியால் பரிசோதிக்கப்படுவர். விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்'' என்றனர்.