| ADDED : நவ 24, 2025 06:13 AM
மதுரை: தமிழக காங்.,ல் புதிய மாவட்ட தலைவர்களை தேர்வு செய்ய அகில இந்திய தலைமை நியமித்துள்ள பொறுப்பாளர்கள் குழுவில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் வாரியாக புதிய தலைவர் யார் என்பது குறித்து 3 பேர் கொண்ட பட்டியல் தயாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தற்போதைய மாவட்ட தலைவர்களை மேலும் கொந்தளிக்க வைத்துள்ளது. சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச காங்கிரசில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள மாவட்ட தலைவர்களை மாற்றும் முடிவில், 38 மாவட்டங்களுக்கும் காங்., தலைமை சார்பில் வேறு மாநில நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதில் மாற்றம் செய்து மாவட்டம் வாரியாக செல்லும் பொறுப்பாளருடன் தமிழகத்தை சேர்ந்த சீனியர் தலைவர் ஒருவரை உடன் அழைத்துச் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட தலைவர்கள் கூறியதாவது: புதிய மாவட்ட தலைவர்களை நியமிக்கும் விஷயத்தில் அவசரம் காட்டுவது தேவையற்றது. இப்பொறுப்பாளர் குழு அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மாவட்ட தலைவருக்கு போட்டியிடுபவர்களிடம் விண்ணப்பம் பெற்று, அவர்கள் செயல்பாடுகளை வட்ட, மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்து கேட்கும். மேலும் சில வழிகளில் அவர்களை விசாரித்து தலா மூன்று பேர் கொண்ட பட்டியலை இறுதி செய்து அகில இந்திய தலைமைக்கு அனுப்பி வைக்கும். பொறுப்பாளர் குழுவிற்கு மொழி பிரச்னையை தவிர்க்க மூத்த நிர்வாகிகளில் ஒருவரை உடன் செல்ல அனுமதிக்கப் பட்டுள்ளது. தலைமையின் இந்நடவடிக்கைக்கு தற்போதைய மாவட்ட தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சிலர் கொந்தளிக்கின்றனர். கட்சிக்குள் பல கோஷ்டிகள் உள்ளன. மாவட்ட தலைவர்கள் நன்றாக செயல்பட்டாலும் கோஷ்டிகளால் பாதிப்பு ஏற்படும் என்றனர்.
இன்று ஆலோசனை
அகில இந்திய பொறுப்பாளர்கள் குழுக்கள் புதிய மாவட்ட தலைவர்களை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்து சென்னையில் இன்று (நவ.,24) ஆலோசனை கூட்டம் நடக்கிறது. இதன்பின் மாவட்டங்களுக்கு பொறுப்புக் குழு செல்லும். அக்குழுவிற்கு தேவையான ஏற்பாடுகளை தற்போதைய மாவட்ட தலைவர்கள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.