மதுரை ரிங் ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரிய வழக்கு டோல்கேட் வழியாக சென்ற வாகன எண்ணிக்கையை கேட்கிறது கோர்ட்
மதுரை: மதுரை ரிங் ரோடு பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த தடை கோரிய வழக்கில், ஓராண்டில் ரிங்ரோடு டோல்கேட் வழியாக சென்று வந்த வாகனங்களின் எண்ணிக்கை விபரத்தை மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி வழக்கறிஞர் ஜெயருத்ரன் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க உத்தங்குடி முதல் கப்பலுார் வரை ரிங்ரோடு அமைக்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் அடிக்கடி அரசியல் கட்சிகள், இயக்கங்களின் மாநாடு, பொதுக்கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க வாகனங்களில் செல்வோர் டோல்கேட் கட்டணம் செலுத்துவதில்லை. ரிங்ரோடு பகுதியிலுள்ள திருமண மண்டபங்களில் விழாக்கள் நடக்கின்றன. அப்போது வாகனங்களை சாலையில் நிறுத்துகின்றனர். இவற்றால் போக்குவரத்து பாதிக்கிறது. விமான நிலையம், மருத்துவமனைகள், பள்ளி, கல்லுாரிகள் உள்ளன. தென்மாவட்டங்களுக்குச் செல்ல இவ்வழியை பயன்படுத்த வேண்டியுள்ளது. போக்குவரத்து நெரிசலால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியவில்லை. திருமண மண்டபங்களுக்கான உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். வரும் காலங்களில் உரிமம் வழங்கக்கூடாது. ரிங்ரோட்டை மேம்படுத்தி முறையாக பராமரிக்க வேண்டும். அப்பகுதியில் பொதுக்கூட்டம், மாநாடு, ஊர்வலம் நடத்த தடை விதிக்க வேண்டும். விழாக்கள், ஊர்வலம் மற்றும் இதர நிகழ்ச்சிகளின்போது இடையூறின்றி வாகனங்கள் சென்றுவருவதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (என்.எச்.ஏ.ஐ.,), தமிழக சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் ஆஜரானார். நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: கடந்த ஓராண்டில் ரிங்ரோடு டோல்கேட் வழியாக சென்று வந்த வாகனங்களின் எண்ணிக்கை விபரத்தை என்.எச்.ஏ.ஐ., தமிழக சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் தலைவர், நெடுஞ்சாலைத்துறை செயலர், மதுரை கலெக்டர் பதில் மனுவாக தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. விசாரணை அக்.27க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.