கோமாதா... எங்கள் குலமாதா: கால்நடைகளை கட்டி வைத்து வளர்க்க இலவச ஏற்பாடு: மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் துவக்கம்
மதுரை: மதுரை பெத்தானியாபுரத்தில் மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் ரோட்டில் திரியும்கால்நடைகளுக்கான காப்பகம் விரைவில் அமைப்பதற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ளன. பெத்தானியாபுரம் பாண்டியராஜபுரம் ராஜாங்க வீதியில் 200க்கும் மேற்பட்டோர் மாடுகளை வளர்க்கின்றனர். நகரின் பிரதான பகுதியில் அவற்றை கட்டி வைத்து வளர்க்கும் அளவு இடவசதி உரிமையாளர்களுக்கு இருப்பதில்லை. அவற்றை கண்டபடி திரிய விடுகின்றனர். நகருக்குள் பசும்புல் தீவனமின்றி கிடைக்கும் சுவரொட்டி, பாலிதீன் கழிவுகளை உண்பது போன்ற சூழலில் வளர்வதுடன், போக்குவரத்துக்கு இடையூறாகவும் திரிகின்றன. அவற்றின் கழிவுகளை பாதாள சாக்கடையில் கொட்டுவதால், அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேடானசூழலும் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகராட்சிக்கு ஏராளமான புகார்கள் வருகின்றன. இலவச பராமரிப்பு காப்பகம் இதையடுத்து, மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் மதிப்பில் 4,500 சதுர அடி பரப்பில், 50க்கும் மேற்பட்ட மாடுகளை ஒரே நேரத்தில் பராமரிக்கும் வகையில் காப்பகம் கட்டப்பட உள்ளது. இங்கு மாடுகளுக்கு தீவனம்,தண்ணீர் வழங்கப்படும். அவற்றை பராமரிக்க கால்நடை மருத்துவ மையமும் அமைய உள்ளதால் அப்பகுதி ஆடு, நாய், பூனை, போன்ற பிற கால்நடைகளுக்கும் மருத்துவ வசதி கிடைக்கும். இங்கு கால்நடைத்துறை மருத்துவர் காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை அமர்ந்து மருத்துவ வசதி வழங்குவார். கால்நடை மருந்தகமாகவும் விளங்கும். சமீபத்தில் சென்னையில் இதுபோன்றதொரு காப்பகம் திறக்கப்பட்டது. அதில் தினமும் ஒரு மாடுக்கு ரூ.10 கட்டணம் உரிமையாளர்களிடம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் மதுரையில் இப்பகுதியினர் இலவசமாகவே பயன்படுத்திக் கொள்ளலாம். மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் சோலை ராஜா கூறியதாவது: எங்கள் வார்டில் அதிகளவில் மாடுகள் வளர்க்கின்றனர். இதில் 100க்கும் மேற்பட்ட மாடுகள் போதிய பராமரிப்பு இன்றி அழிவின் விளிம்பில் உள்ளன. அவற்றுக்கு சிகிச்சை அளிக்க 5 கி.மீ., தொலைவில் பழங்காநத்தம்,தல்லாகுளம் செல்ல வேண்டியுள்ளது. கால்நடைத் துறையினர் இங்கு கால்நடை துணை மையம் அமைக்க எங்களை அணுகினர். அவர்களிடம் மாடுகள் காப்பகம் குறித்து நாங்கள் தெரிவித்தோம். இதையடுத்து மாநகராட்சி கமிஷனர், தலைமை பொறியாளர் இங்கு ஆய்வு நடத்தி இடத்தை தேர்வு செய்தனர். காப்பகத்திற்கான செலவில் மாநகராட்சி ரூ.25 லட்சம், மீதி ரூ.35 லட்சம் தனியார் பங்களிப்போடு பணிகளை துவங்கியுள்ளோம். அடுத்த மாதத்திற்குள் கால்நடை பராமரிப்பு காப்பகம் திறக்கப்படும். என்றார்.