அழகர்கோவிலில் கட்டுமானம் உயர் நீதிமன்றம் புது உத்தரவு
மதுரை: மதுரை, அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில் பக்தர்கள் தங்கும் விடுதி, அர்ச்சகர்கள் குடியிருப்பு உள்ளிட்ட நான்கு கட்டுமான பணியை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர உத்தரவிட்டது உயர் நீதிமன்ற மதுரை கிளை. மேலுார் வெள்ளரிப்பட்டி பிரபு தாக்கல் செய்த பொதுநல மனு: அழகர்கோவில் கள்ளழகர் கோவிலில், 40 கோடி ரூபாயில் கழிப்பறை, பேவர் பிளாக் பதித்தல், பிரமுகர்கள் தங்கும் விடுதி உட்பட பல மேம்பாட்டு பணிகளை மேற்கொள்ள அறநிலையத்துறை அரசாணை வெளியிட்டது. இதன் அடிப்படையில் கோவில் அறங்காவலர் குழு தீர்மானம் நிறைவேற்றியது. பணியை கோவில் நிதி மூலம் மேற்கொள்ள அனுமதித்தது, அறநிலையத்துறை சட்டத்திற்கு புறம்பானது. கட்டுமான பணிக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் அனிதா சுமந்த், சி.குமரப்பன் அமர்வு பிறப்பித்த உத்தரவு: கோவில் வளாக கிழக்கு பகுதி பெரியாழ்வார் திருவரசு மற்றும் தெற்கில் வசந்த மண்டபம் பகுதியில் கோட்டை சுவரை திரும்ப கட்டுதல், கோவில் வளாகத்தில் பக்தர்கள் தங்க புது விடுதி, அர்ச்சகர்கள் குடியிருப்பு, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணியை பொறுத்தவரை தற்போதைய நிலை தொடர வேண்டும். அறநிலையத்துறை செயலர், கமிஷனர், கோவில் செயலர் அலுவலர் செப்., 15ல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர். ஆக., 28ல் இது போன்ற மற்றொரு வழக்கு விசாரணைக்கு வந்த போது, இரு நீதிபதிகள் அமர்வு, கடைகள், உணவருந்தும் கூடம், முக்கிய பிரமுகர்கள் தங்கும் விடுதி அமைக்கும் பணிக்கு இடைக்கால தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.