கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றுக உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை: மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு: விருதுநகர் மாவட்டம் சாத்துார் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் மேம்பாட்டு பணி நிறைவு பெறவில்லை. கோயில் வளாகம் கடைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பக்தர்களுக்கு இடையூறாக உள்ளது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும். மேம்பாட்டு பணியை விரைந்து முடிக்க அறநிலையத்துறை இணை கமிஷனர், கோயில் உதவி கமிஷனருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ராஜன் ஆஜரானார். அரசு தரப்பு, 'போலீசாரின் உதவியுடன் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்' என தெரிவித்தது. நீதிபதிகள், 'அந்நடவடிக்கையை 12 வாரங்களில் முடிக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.