| ADDED : ஜன 21, 2024 03:50 AM
மதுரை: ''மனிதனுக்கு சேவை செய்வதும், கடவுளை வழிபடுவதும் ஒன்று தான்,'' என, அகில உலக ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் துணைத்தலைவர் கவுதமானந்தஜி மகராஜ் பேசினார்.'ஆன்மிக வாழ்க்கைக்கான வழிகாட்டுதல்' என்ற தலைப்பில் மதுரை ராமகிருஷ்ண மடத்தில் சொற்பொழிவு நடந்தது. தலைவர் கமலாத்மானந்தர் தலைமை வகித்தார்.கவுதமானந்தஜி மகராஜ் பேசியதாவது: உலகம் இயந்திரம்போல் இயங்குகிறது. காலையில் சூரியன், மாலையில் சந்திரன், இரவில் நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த ஒருவர் உள்ளார். அவர்தான் கடவுள். யாரையும் ஒருவர் கட்டுப்படுத்தாவிடில் எதுவும் முறையாக நடக்காது. கடவுள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் என ராம கிருஷ்ண பரமஹம்சர் கூறினார். கடவுளை பார்த்தவர்கள் பல ஆயிரம் பேர். நீங்களும் பார்க்கலாம். அதற்கு எளிதான வழி நல்ல குரு, நல்லோரின் நட்பு தேவை. மந்திரம், கடவுளிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். ஆன்மிக சிந்தனையுடையோர் நல்லோர்களே.மனிதனுக்கு சேவை செய்வதும், கடவுளை வழிபடுவதும் ஒன்றுதான். மனிதர்கள் மட்டுமே கடவுள் சிந்தனை உள்ளவர்கள். அது மற்ற ஜீவராசிகள் மத்தியில் இல்லை.ஆன்மிகத்தால் மனது அமைதியாகும். கோபம் குறையும். குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கும். ஆன்மிக வாழ்க்கை அழிவற்றது, அளவற்றது என்றார்.இன்று (ஜன.,21) காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை மந்திர தீட்சை வழங்குகிறார்.