நிலக்கடலை விதைப்பண்ணையை வேளாண் இணை இயக்குனர் ஆய்வு
நிலக்கடலை விதைப்பண்ணையை வேளாண் இணை இயக்குனர் ஆய்வுநாமகிரிப்பேட்டை : மாநில விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்புத்துறை இணை இயக்குனர் தபேந்திரன், நேற்று நாமகிரிப்பேட்டை வட்டாரத்தில் உள்ள விவசாயி நடேசன் வயலில் அமைத்துள்ள, 3 ஏக்கர் நிலக்கடலை விதைப்பண்ணையை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதில், விதைப்பண்ணைகளின் பங்கு, வயல் தரங்களை பராமரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து எடுத்துரைத்தார். கொல்லிமலையில் விவசாயிகளுடன் கலந்துரையாடல் மேற்கொண்டு நோயற்ற வாழ்வு வாழ, நஞ்சில்லா உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்ய உயிர்ம பண்ணையம் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்து விவசாயிகளுக்கு வலியுறுத்தினார். நாமக்கல் விதைச்சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில், விதைப்பண்ணை பதிவு, சான்று விதை உற்பத்தி இலக்கு சாதனை அடைந்ததை பாராட்டினார். விதைப்பரிசோதனை நிலையத்தில் நிலக்கடலை, எள், துவரை, உளுந்து, நெல் மற்றும் ஆமணக்கு பயிர்களில், ரகம் வாரியாக பயிர்களின் சிறப்பு இயல்புகள் குறித்தும், ரகங்களின் தனித்தன்மை குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். ஆண்டு இலக்கை, இம்மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார். நாமக்கல் விதைச்சான்று மற்றும் உயிர்மசான்று உதவி இயக்குனர் சித்திரைச்செல்வி, தர்மபுரி விதைப்பரிசோதனை அலுவலர் கிரிஜா, கொல்லிமலை வேளாண்மை உதவி இயக்குனர் கவிதா, வேளாண்மை விதைச்சான்று அலுவலர்கள் ஹேமலதா, ரஞ்சிதா மற்றும் விதைப்பரிசோதனை நிலைய அலுவலர்கள் தேவிப்பிரியா, சரண்யா ஆகியோர் உடனிருந்தனர்.