| ADDED : ஏப் 30, 2024 10:52 PM
கந்தம்பாளையம்:நாமக்கல் மாவட்டம், கந்தம்பாளையம் அருகே பெருங்குறிச்சியை சேர்ந்தவர் தேவராஜ், 60. இவரது மகன் சஞ்சய், 21. ப.வேலுாரில் தனியார் கல்லுாரியில், பி.எஸ்சி., இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, 9:00 மணிக்கு, கல்லுாரிக்கு தேர்வெழுத செல்வதற்காக கந்தம்பாளையம் பஸ் ஸ்டாப்பில் காத்திருந்தார்.அப்போது, திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு, நல்லுார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு துாக்கி சென்றனர். மேல் சிகிச்சைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், சஞ்சய் இறந்து விட்டதாக தெரிவித்தனர். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில், வெப்ப அளவு, 105 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் பதிவாகி வருகிறது. இதனால், வெப்பம் தாங்காமல் சஞ்சய், மயங்கி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என, அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.