நாமக்கல்: ''சிப்காட் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருச்சி மாவட்ட எல்லைக்கு குடிநகர்வு ஒத்திகை நடத்த உள்ளோம்,'' என, விவசாய முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியன் கூறினார்.இதுகுறித்து, நிருபர்களிடம் அவர் கூறியதாவது:மோகனுார் தாலுகா, வளையப்பட்டி, என்.புதுப்பட்டி, அரூர் பகுதிகளில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுப்பதற்கு வருவாய்த்துறையினர் ஆய்வு பணி மேற்கொண்டுள்ளனர். இது தொடர்பாக, 2023 மே, 29ல், ஆர்.டி.ஓ., அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடந்த கூட்டத்தில், வருவாய்த்துறையினர் தயார் செய்யப்பட்ட வரைபடங்களையும், அறிக்கைகளையும் காண்பித்தனர். அதில், நீர்நிலைகள் மறைக்கப்பட்டு விவசாய நிலங்களை தரிசு நிலங்கள் என குறிப்பிட்டிருந்தனர்.அதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால், 'புதிதாக வரைபடம் தயாரிக்கப்பட்டு, அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும்' என்றனர். ஆனால், ஓராண்டாகியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. முழுக்க முழுக்க தவறான தகவலை மாவட்ட நிர்வாகம் அளித்ததின் பேரில், 'சிப்காட்' நிறுவனம் நிலம் கையகப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. விவசாய நிலங்களை எக்காரணத்தை கொண்டும் எடுக்கமாட்டோம் என, 'சிப்காட்' நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர் போராட்டம் நடத்தியும் மாவட்ட நிர்வாகம் அழைத்து பேசவில்லை. அதனால், திருச்சி மாவட்ட எல்லைக்கு குடிநகர்வு ஒத்திகை போராட்டம் நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.