நாமக்கல், : நாமக்கல் மாவட்டத்தில் உள்ள, ஆறு சட்டசபை தொகுதிகளில், இரண்டு நாட்கள் நடந்த, எஸ்.ஐ.ஆர்., சிறப்பு முகாமில், 2.31 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, தமிழகத்தில், 'வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026' நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டசபை தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், எஸ்.ஐ.ஆர்., படிவங்களை வாக்காளர்களுக்கு வழங்கி, நிரப்பப்பட்ட படிவங்களை மீண்டும் பெற்று வருகின்றனர்.நாமக்கல் மாவட்டத்தில், அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும், கடந்த, இரண்டு நாட்களில், சிறப்பு முகாம் நடந்தது. அதில், ராசிபுரம் தொகுதியில் உள்ள, 261 ஓட்டுச்சாவடிகளில், 43,394 படிவங்கள் பெறப்பட்டன. சேந்தமங்கலத்தில், 284 ஓட்டுச்சாவடியில், 48,024, நாமக்கல்லில், 290 ஓட்டுச்சாவடியில், 34,976, ப.வேலுாரில், 254 ஓட்டுச்சாவடியில், 35,185, திருச்செங்கோட்டில், 261 ஓட்டுச்சாவடியில், 29,126, குமாரபாளையம் சட்டசபை தொகுதியில், 279 ஓட்டுச்சாவடியில், 40,966 என, 1,629 ஓட்டுச்சாவடிகளில், மொத்தம், 2 லட்சத்து, 31,671 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.இதற்கிடையே, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில், ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான துர்கா மூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது: இரண்டு நாட்கள் நடந்த முகாமில், உதவி மற்றும் துணை கலெக்டர்கள், மாவட்ட அலுவலர்கள், அரசு அலுவலர்கள், பணியாளர்கள் என, 3,500 பேர் நியமிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. உள்ளாட்சி அமைப்புகளான, ஒரு மாநகராட்சி, நான்கு நகராட்சிகள், 19 டவுன் பஞ்., 15 ஒன்றியங்கள், 8 தாலுகா அலுவலங்கள், இரண்டு ஆர்.டி.ஓ., அலுவலகம் ஆகியவற்றில், வரும், 28 வரை, அனைத்து வேலை நாட்களிலும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த உதவி மையங்கள் செயல்படும். நாமக்கல் மாவட்டத்தில் உள்ள வாக்காளர்கள், இந்த வாய்ப்பை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.