மேலும் செய்திகள்
'நாட்டிங்' உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்
01-Aug-2025
நாமக்கல், கடன் வாங்காத லாரியை பறிமுதல் செய்த தனியார் வங்கியிடம் இருந்து, லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், லாரியை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.சென்னையைச் சேர்ந்த லாரி உரிமையாளர் பொன்னுரங்கம், 45; டேங்கர் லாரியை விலைக்கு வாங்கி, அவரே டிரைவாக ஓட்டிக்கொண்டிருந்தார். லாரியின் மீது கடன் எதுவும் வாங்கவில்லை. கடந்த ஜூலை, 16ம் தேதி அன்று அந்த லாரி, சேலம் வழியாக சமையல் எண்ணெய் ஏற்றிச்சென்றது. அப்போது ஒரு கும்பல் அந்த லாரியை தடுத்து நிறுத்தி, அந்த லாரிக்கு வாங்கியுள்ள கடன் தவணை செலுத்தாததால், லாரியை பறிமுதல் செய்வதாகக் கூறி, லாரி உரிமையாளர் பொன்னுரங்கத்தை லாரியில் இருந்து இறக்கிவிட்டு லாரியை எடுத்துச்சென்று, சேலத்தில் உள்ள பார்க்கிங் மையத்தில் நிறுத்தி சென்றது. இது குறித்து, பொன்னுரங்கம், லாரி உரிமையாளர்கள் சங்கத்தில் புகார் செய்தார். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சம்மேளன தலைவர் செல்லராஜாமணி, மணல் லாரி கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ், நாமக்கல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் அருள், டிரெய்லர் உரிமையாளர்கள் சங்க தலைவர் சின்னுசாமி உள்ளிட்ட லாரி உரிமையாளர்கள், நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள சம்மந்தப்பட்ட தனியார் வங்கி கிளையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கடனே வாங்காத லாரியை, கடன் வசூல் ஏஜென்சி மூலம் பறிமுதல் செய்ததை கண்டித்தனர். தனியார் வங்கி நிறுவனம், லாரியை திருப்பி கொடுப்பதாக ஒப்புக்கொண்டது. நேற்று அந்த லாரிக்கான கிளியரன்ஸ் ஆர்டர் பெறப்பட்டு, சேலம் பார்க்கிங் மையத்தில் இருந்து எடுத்து வரப்பட்டது.இதையொட்டி நாமக்கல், கீரம்பூர் டோல் கேட் அருகில் நடந்த நிகழ்ச்சியில் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள், லாரி சாவியை அதன் உரிமையாளர் பொன்னுரங்கத்திடம் ஒப்படைத்தனர்.
01-Aug-2025