இந்து முன்னணியினர் சார்பில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலம்
நாமக்கல்:நாமக்கல் நகரில் இந்து முன்னணியினர் மற்றும் பொதுமக்கள் சார்பில், 50க்-கும் மேற்பட்ட இடங்களில், விநாயகர் சதுர்த்தியையொட்டி சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டது. இதில், பொதுமக்கள் சார்பில் வைக்கப்பட்ட சிலைகள், நேற்று முன்தினம் ஊர்வலமாக எடுத்துச்சென்று, மோகனுார் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.இந்து முன்னணி சார்பில், பலபட்டரை மாரியம்மன் கோவில், குட்டைத்தெரு, ராமாபுரம்புதுார் உள்பட, 18 இடங்களில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, மோகனுார் காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.முன்னதாக பலபட்டரை மாரியம்மன் கோவில் அருகே கொண்டுவரப்பட்ட சிலைகள் லாரிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் கவுரவ செயலாளர் வக்கீல் அய்யாவு தலைமை வகித்து, ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.அ.தி.மு.க., தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் முரளி பாலுசாமி, வக்கீல் ஆறுமுகம், அறுபடை முருக பக்தர்கள் சேவா சங்கம் மாவட்ட தலைவர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராஜேஸ், தமிழக நீதிக்கட்சி நிறுவனர் சரவணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தர்மதுரை உள்பட இந்து முன்னணி நிர்வாகிகள் வாழ்த்தி பேசினர்.ஏ.டி.எஸ்.பி., தனராசு தலைமையில், 90-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.