| ADDED : ஜூன் 30, 2024 01:45 AM
ராசிபுரம்,ராசிபுரம், பட்டணமுனியப்பம்பாளையம் கிராமத்தில், 'அட்மா' திட்டத்தில், காய்கறி பயிர்களில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி நடந்தது. ராசிபுரம் வேளாண்மை உதவி இயக்குனர் செந்தில்குமார், தோட்டக்கலை உதவி இயக்குனர் லோகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சந்தியூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை இணை பேராசிரியர் ரவி, காய்கறி பயிர்களில் இலைப்பேன், அசுவினி, மாவுப்பூச்சி, அறிகுறிகள் மற்றும் வெங்காயத்தில் கோலிக்கால் நோய், மரவள்ளி பயிரில் மாவுப்பூச்சி ஆகியவற்றின் தாக்குதல் மற்றும் நிவர்த்தி முறைகள், உயிரியல் முறையில் கட்டுப்பாடு, இனக்கவர்சி பொறி பயன்கள் ஆகியவை குறித்து விளக்கமளித்தார்.மேலும், மத்ருட்டு கிராமத்தை சேர்ந்த இயற்கை முன்னோடி விவசாயி பெரியசாமி, மண்ணை வளப்படுத்த பசுந்தாள் உரம், ஜீவாமிர்தம், அக்னிஅஸ்திரம், கலப்பு பயிர் மற்றும் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த வரப்பு பயிர் சாகுபடி ஆகியவை பற்றி விளக்கமளித்தார். தனியார் வேளாண் கல்லுாரி மாணவர்கள், வேர்ப்புழு தாக்குதல், கட்டுப்பாடு பற்றி எடுத்துக்கூறினர். உதவி வேளாண்மை அலுவலர் பார்கவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ராசிபுரம் வட்டார, 'அட்மா' அலுவலர் சந்திரசேகரன் உள்பட பலர், பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.