நாமக்கல்: 'காசோலை வழக்குகள், நீதிமன்றங்களில் அதிக அளவு தேங்கியுள்ளது. அவ்வழக்குகளை மூன்று மாதங்களில் முடிக்க, தனி நீதிமன்றம் அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மகாசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தாலுகா ஃபைனான்ஸ் அசோசியேஷன் சார்பில், 19ம் ஆண்டு மகா சபை கூட்டம், நாமக்கல்லில் நடந்தது. சங்கத் தலைவர் காளியப்பன் தலைமை வகித்தார். மணி மலர் முதலீட்டகம் நிறுவனர் சுப்பராயன் வரவேற்றார். செயலாளர் சம்பத் ஆண்டறிக்கை வாசித்தார். தமிழ்நாடு தனியார் நிதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் மாநில தலைவர் அத்தியப்பன், ஆடிட்டர்கள் வெங்கடசுப்ரமணியம், பழனிவேலு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பதிவு செய்து நிதி நிறுவனங்களை நடத்திவரும் தனியார்கள், மிகவும் துன்பத்துக்கு ஆளாகின்றனர். அவர்கள் வாங்கும் டிபாஸிட்கள் கொடுக்கவில்லை என்றால் சிறை போன்ற கடும் நடவடிக்கைகளை, அரசு எடுத்து வருகிறது. அவர்கள் கொடுத்த கடனை வசூல் செய்வதற்கு வங்கிகள், கூட்டுறவு சங்கங்களுக்கு உள்ளதை போல், கடன் பெற்றவர் சொத்தை கைப்பற்றி ஏலம் விட, ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். காசோலை வழக்குகள், நீதிமன்றங்களில் அதிக அளவு தேங்கி உள்ளது. அந்த வழக்குகளை, மூன்று மாதங்களில் முடிக்கும் வகையில், தனி நீதிமன்றங்களை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நாமக்கல் பஸ் ஸ்டாண்டில் நெருக்கடி அதிகமாக உள்ளதால், அதை டவுன் பஸ் ஸ்டாண்டாக மாற்றிவிட்டு, நகருக்கு வெளியே புறநகர் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும்.
நாமக்கல்லில், ரிங்ரோடு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். ரயில்பாதை பணி மந்தமாக நடப்பதால், நாமக்கல்லில் இருந்து சேந்தமங்கலம், கொசவம்பட்டி செல்லும் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தாலுகா ஃபைனான்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.