நாமக்கல்: அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி, நாமக்கல் மாநகராட்சியில் நடந்தது. கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். எம்.பி., ராஜேஸ்குமார், எம்.எல்.ஏ., ராமலிங்கம், மாநகராட்சி மேயர் கலாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைச்சர் மதிவேந்தன், நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசியதாவது:தமிழக முதல்வர், வரலாற்றிலேயே இல்லாத அளவிற்கு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மேம்பாட்டிற்காக ஏராளமான திட்டங்களை செயல்படுத்திக்கொண்டிருக்கிறார். 2021 முதல், 2025 வரை, ஆதிதிராவிடர் துணை திட்டத்திற்கு, 87,664 கோடி ரூபாய், பழங்குடியினர் துணை திட்டத்திற்கு, 8,078 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு சமூகம் முன்னேற வேண்டும் என்றால், அதற்கு கல்வி தான் அடிப்படை. அதனால் தான், பல்வேறு திட்டங்கள் மூலமாக, கல்வியில் கவனம் செலுத்தப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து, பல்வேறு துறை சார்பில், மொத்தமாக, 2,484 பயனாளிகளுக்கு, 7.13 கோடி ரூபாய் மதிப்பில், அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.துணை மேயர் பூபதி, டி.ஆர்.ஓ., சரவணன், மகளிர் திட்ட இயக்குனர் செல்வராஜ், மாவட்ட வழங்கல் அலுவலர் முருகன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சுரேஷ்குமார், அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.