ஊட்டி:ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், பொது மக்களிடம் இருந்து, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 155 மனுக்கள் பெறப்பட்டன.வாரந்தோறும், திங்கட்கிழமை கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. அதன்படி, நேற்று நடந்த கூட்டத்தில் 155 மனுக்கள் பெறப்பட்டு, தீர்வுக்கான ஏதுவாக, துறை அலுவலர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டது.தொடர்ந்து, 'மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், முஸ்லீம் மகளிர் உதவும் சங்கம் சார்பில், 5 பயனாளிகளுக்கு 70 ஆயிரம் ரூபாய், கிறிஸ்துவ மகளிர் உதவும் சங்கத்தின் சார்பில், 10 பயனாளிகளுக்கு 1.75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளுக்கான காசோலை வழங்கப்பட்டது. மேலும், தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியில் இருந்து, கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு பக்கவாத நோய் நிவாரண நிதி உதவியாக, மாதந்தோறும், 7,000 ரூபாய் பெறுவதற்கான அனுமதி ஆணை,' என, மொத்தம், 16 பயனாளிகளுக்கு, 2.52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. இதில், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் பலர் பங்கேற்றனர்.