| ADDED : ஏப் 24, 2024 09:49 PM
ஊட்டி: ஊட்டி படகு இல்லத்தில் ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டது. ஊட்டி படகு இல்லத்திற்கு ஆண்டுதோறும் சராசரியாக, 16 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். சீசன் துவங்க உள்ள நிலையில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. படகு இல்லத்திலிருந்து வெளியே வரும் நுழைவு வாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளால் வாகனங்கள் வெளியே செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. நடந்து செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது. நேற்று, படகு இல்லம் நிர்வாகம் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றினர். நகராட்சி கமிஷனர் ஏகராஜ் கூறுகையில்,'' ஊட்டியில் கோடை சீசன் நிலவும் நிலையில், நாள்தோறும் பல்லாயிரம் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்நிலையில், தாவரவியல் பூங்கா, படகு இல்லம், கமர்ஷியல் சாலை, ஏ.டி.சி., உட்பட அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்படும். ''அதில், சாலையோரம் வாகனம் செல்லவும், மக்கள் நடமாட இடையூறு ஏற்படும் இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்படும். அதனால்,அத்தகைய பகுதிகளில் யாரும் கடைகளை வைக்க வேண்டாம்,'' என்றார்.