| ADDED : ஜூன் 05, 2024 12:57 AM
கூடலுார்;கூடலுார் நகரில் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பையால், சுகாதார பாதிப்பு ஏற்படுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.கூடலுார் நகரில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதற்கு நகராட்சி தடை செய்துள்ளது. கடைகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பை பிரித்து வாகனங்களில் வரும் நகராட்சி ஊழியர்களிடம் வழங்க அறிவுறுத்தி உள்ளனர். பல கடைக்காரர்கள் இதனை பின்பற்றி வருகின்றனர். சிலர், குப்பையை திறந்த வெளியில் கொட்டி செல்கின்றனர். இதனை தடுக்க நகராட்சி எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பையால் நோய்பரவும் அபாயம் உள்ளது. குறிப்பாக, கோழிக்கோடு சாலை, துப்புக்குட்டி பேட்டையில் உள்ள நிழல்குடையை ஒட்டி, திறந்த வெளியில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரம் பாதிக்கப்படுவதால், மக்கள் அதிருப்தி அடைத்துள்ளனர். மக்கள் கூறுகையில், 'திறந்தவெளியில் குப்பைகள் கொட்டுவதால், நகரில் சுகாதார பாதிப்பு ஏற்படுவதுடன், தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, நகராட்சி நிர்வாகம் நகரில் திறந்த வெளியில் குப்பைகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.