உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / புகைப்பதை தடுக்க சட்டம் இருந்தும் பயனில்லை: கோத்தகிரியில் நடந்த தெருமுனை பிரசாரத்தில் வருத்தம்

புகைப்பதை தடுக்க சட்டம் இருந்தும் பயனில்லை: கோத்தகிரியில் நடந்த தெருமுனை பிரசாரத்தில் வருத்தம்

கோத்தகிரி : கோத்தகிரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில், புகையிலை மறுப்பு தின தெருமுனை பிரசாரம் நடந்தது. கோத்தகிரி பேரூராட்சி தலைவி ஜெயக்குமாரி தலைமை வசித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில கருத்தாளர் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜூ சிறப்பு பேசியதாவது: ஒரு சிகரெட் புகையில் பல்வேறு வேதிப்பொருட்கள் உள்ளன. அதில், 70 வேதிப்பொருட்கள் புற்றுநோயை உண்டாக்கக் கூடியவை. புகைக்கும் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு, 90 சதவீதம் உள்ளது. புகை உடலில் உள்ளே அனைத்து பாகங்களையும் பாதிக்கிறது. குறிப்பாக, அதில் உள்ள வேதி பொருள், தார் சாலையில் போடப்படும் தாரை போல, மூச்சு குழாயில் ஒட்டிக்கொண்டு மாரடைப்பு நோயை வரவழைக்கிறது.'நிகோடின்' என்ற நச்சு பொருள் மீண்டும், மீண்டும் புகைக்க துாண்டி அந்த பழக்கத்திற்கு நம்மை அடிமைப்படுத்துகிறது. சிகரெட் புகையில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சு பொருள் மூளைக்கு செல்லும் ஆக்சிஜனை குறைத்து, மூளை கட்டியை ஏற்படுத்துகிறது. புகைப்பவர் விடும் புகையை சுவாசிக்கும் புகைக்காதவர்கள் வருடத்தில், 6 லட்சம் பேர் புற்று நோயால் இறக்கின்றனர். பொது இடங்களில் புகைப்பதை தடுக்க சட்டம் இருந்த போதிலும், அது செயல்படாமல் இருப்பது வருந்தத்தக்கது. கடுமையான சட்டத்தை கொண்டு வரும்போது தான், புகையினால் ஏற்படும் தீமைகளில் இருந்து, மக்களை பாதுகாக்கலாம். இவ்வாறு, அவர் பேசினார். தொடர்ந்து, துண்டு பிரசுரம் வினியோகித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 'ஐலண்ட் டிரஸ்ட்' நிர்வாக இயக்குனர் சாராள் உட்பட, பலர் பங்கேற்றனர். 'கேர் டிரஸ்ட்' நிர்வாக இயக்குனர் வினோபா வரவேற்றார். களப்பணியாளர் சுகுணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி