| ADDED : ஜூன் 12, 2024 10:28 PM
சூலுார் : சூலுார் அடுத்த பீடம்பள்ளியில் துவக்கப்பள்ளி செயல்படுகிறது. 100 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். 100 ஆண்டுகள் பழமையான ஓட்டு கட்டடமாக இருப்பதால், மழை பெய்தால், சுவர்களில் ஓதம் அடிக்கிறது. இதனால், சுவர்கள் பலமிழந்து உள்ளதால், இடிந்து விடும் அபாயம் உள்ளது. இதையடுத்து, கடந்த கல்வி ஆண்டில் இருந்து புதிய கட்டடம் கட்ட வேண்டும், என, பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். ஒன்றிய நிர்வாகம், மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால், இதுவரை கட்டடத்தை இடித்து அகற்றி புதிய கட்டடம் கட்ட எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதையடுத்து, குழந்தைகளின் பாதுகாப்பு கருதி ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. அருகில் உள்ள சமுதாய கூடத்தில், தற்காலிகமாக பள்ளியை நடந்த முடிவு செய்யப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முழுவதும் சமுதாய கூடத்தில் பள்ளி செயல்படும், என, வட்டார கல்வி அலுவலர்கள் கூறினர்.இதுகுறித்து பெற்றோர் கூறுகையில்,'பள்ளி கட்டடம் சேதமடைந்து அபாயகரமாக உள்ளது. மக்கள் பிரதிநிதிகள் புதிய பள்ளி கட்டடம் கட்ட துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.