| ADDED : பிப் 02, 2024 10:35 PM
ஊட்டி:வரதட்சணை கொடுமை வழக்கில் தொழிலாளிக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, ஊட்டி மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.நீலகிரி மாவட்டம், தேவாலா அடுத்த வாழவயல் பகுதியை சேர்ந்தவர் ராஜன் பாபு,42. இவர் அந்த பகுதியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். 2011 ம் ஆண்டு எமரால்டு இந்திரா நகர் பகுதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆன சில நாட்களில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. மனைவி, 6 மாத கர்ப்பிணியாக இருந்தபோது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது வரதட்சணை வாங்கி வருமாறு ராஜன்பாபு அவருடைய மனைவிக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். மனைவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.தேவாலா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி ராஜன் பாபு உட்பட, 4 பேர் மீது வரதட்சணை கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜன் பாபு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஊட்டி மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது. நேற்று முன்தினம் வழக்கின் தீர்ப்பு கூறப்பட்டது. ராஜன் பாபுவுக்கு, 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், 1,000 ரூபாய் அபராதமும் விதித்து மகிளா கோர்ட்டு நீதிபதி ஸ்ரீதரன் உத்தரவிட்டார். அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் செந்தில்குமார் ஆஜரானார்.