உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / அவலாஞ்சி சுற்றுப்புறத்தில் உள்ள அன்னிய மரங்கள் 4,000 ஏக்கர் அகற்றம்! ஆண்டுக்கு 30 ஆயிரம் மரக்கன்று வழங்கும் பணி துரிதம்

அவலாஞ்சி சுற்றுப்புறத்தில் உள்ள அன்னிய மரங்கள் 4,000 ஏக்கர் அகற்றம்! ஆண்டுக்கு 30 ஆயிரம் மரக்கன்று வழங்கும் பணி துரிதம்

ஊட்டி: நீலகிரி வனக்கோட்டம் அவலாஞ்சி சுற்றுப்புற வனப்பகுதிகளில், 4000 ஏக்கரில் அன்னிய மரங்கள் அகற்றப்பட்டு சோலை மரங்கள், புல்வெளிகள் உருவாக்கும் பணி நடந்து வருகிறது. மாநிலம் முழுவதும் வனப்பரப்பை, 33 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, 2.60 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வனத்துறை வாயிலாக நடந்து வருகிறது. இந்நிலையில், 65 சதவீதம் வனம் சூழ்ந்த பகுதியான, நீலகிரி மாவட்டத்தில், கற்பூரம், சீகை உள்ளிட்ட அன்னிய மரம் அதிகரித்துள்ளதால், வன விலங்குகளுக்கான தாவரங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் அடங்கி குழுவினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆய்வு செய்து,'அன்னிய மரங்கள்; களைச்செடிகளை அகற்ற வேண்டும்,' என, உத்தரவிட்டனர். இதனை அடுத்து வனத்துறையினர் அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

4000 ஏக்கர் அகற்றம்

மாவட்டத்தில், கற்பூரம், பைன் மற்றும் சீகை ஆகிய அன்னிய மரங்கள், சோலை மரங்கள்; புல்வெளிகள் உள்ள பகுதிகளை ஆக்கிரமித்து அவற்றை அழித்து வருகின்றன. இதனை தவிர்க்க, அன்னிய மரங்களை அகற்றி, உள்நாட்டு சோலை மரங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலான பணியை தீவிரமாக செய்து வருகிறது. இந்த முயற்சியில் உள்நாட்டு சோலை மரங்களான, நாவல், கொட்லான், கருந்தாரி போன்ற மரங்கள் வழங்கப்பட்டு படிப்படியாக வனப்பகுதியில் நடப்பட்டு வருகிறது. தற்போது, நீலகிரி வனக்கோட்டத்திற்கு உட்பட்ட அவலாஞ்சி, அப்பர் பவானி, கோரகுந்தா சுற்றுவட்டார வனப்பகுதிகளில், கடந்த சில ஆண்டுகளில், 4000 ஏக்கர் பரப்பில் உள்ள, அன்னிய மரங்கள் அகற்றும் பணி விரைவாக நடந்து வருகிறது. அகற்றப்படும் மரங்கள் உள்ளூர் தொழிற்சாலைகளில் எரிபொருள் தேவைக்கு பயன்படுத்துவதுடன், வெளி மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், ''நீலகிரி வன கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அன்னிய மரங்கள் படிப்படியாக அகற்றப்பட்டு வருகிறது. அகற்றப்படும் இடங்களில் மரங்கள் ஏதும் நடப்படுவதில்லை.சோலை மரங்கள் நடவு செய்யவும், புலிவெளியாகவும் விடப்படுகிறது. அவலாஞ்சி சுற்றுப்புற வனப்பகுதிகளில் அன்னிய மரங்கள் விரைவாக அகற்றப்பட்டு வருகிறது. 4000 ஏக்கரில் இருந்த அன்னிய மரங்கள் அகற்றப்பட்டு வருகிறது. அதே சமயத்தில் நீலகிரியின் சுற்றுச்சூழலை பாதுகாக்க பொதுமக்கள், தன்னார்வலர்களுக்கு தேவைக்கேற்ப சோலை மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. ஆண்டு தோறும், 30 ஆயிரம் சோலை மரக்கன்றுகள் பொதுமக்கள் உட்பட தன்னார்வலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை