உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிரடி டிரான்ஸ்பர்! இணைப்பதிவாளர் எடுத்த நடவடிக்கையால் அதிர்ச்சி

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அதிரடி டிரான்ஸ்பர்! இணைப்பதிவாளர் எடுத்த நடவடிக்கையால் அதிர்ச்சி

ஊட்டி : நீலகிரியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், 23 வங்கி செயலாளர்கள் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, கூடலுார் மற்றும் பந்தலுார் ஆகிய தாலுகா பகுதிகளில், 77 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கங்கள் செயல்பட்டு வருகிறது. வங்கி செயலாளர்கள் தலைமையில் செயல்பட்டு வரும் சங்கங்களில், 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அதில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம், சிறு விவசாயிகளுக்கு பயிர்கடன், நகைக்கடன், உரக்கடன், கறவைமாடு கடன் உள்ளிட்ட பல்வேறு திட்ட கடன்கள் வழங்கப்படுகிறது. கூட்டுறவு சங்கத்தின் கீழ், ரேஷன் கடைகளும் செயல்படுகிறது.

சங்கங்களை மேம்படுத்த நடவடிக்கை

இந்த சங்கங்களை மேம்படுத்தி, அங்கு உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு சிறப்பான சேவையை வகுத்து கொடுக்க, கூட்டுறவு துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வகையில், 'தொய்வில் உள்ள கூட்டுறவு சங்கத்திற்கு புத்துயிர் கொடுக்க நடவடிக்கை; வங்கி சேவையில் சுணக்கம் உள்ள வங்கிகளின் மேம்பாடு; நிர்ணயிக்கப்பட்ட பயிர் கடன், நகைக்கடன் திட்டத்தில் இலக்கை எட்டாத சங்கங்கள் மீது நடவடிக்கை; வங்கியில் காலியாக உள்ள செயலாளர் பதவிக்கு கூடுதல் பொறுப்பு வழங்குவது,' உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக, பல வங்கி செயலாளர்களை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து உத்தரவிட்டுள்ளார்.

மாற்றமும்... கூடுதல் பொறுப்பும்

அதில், கூட்டுறவு பொதுப்பணி நிலைத்திறன் கீழ் வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி , முதற்கட்டமாக, 'எடக்காடு,குந்தா, ஓரநள்ளி தங்காடு, அதிகரட்டி, கன்னேரி மந்தனை, ஈத்தேஸ்வரன், தொட்டபெட்டா, காவிலோரை, நஞ்சநாடு, மகாலிங்கா, உபதலை, கம்பயாடா, எடப்பள்ளி, எத்தையம்மன், கோடேரி கெந்தளா, மைனலை மடிதொரை, ஜெகதளா, கூடலுார், நெலாக்கோட்டை, முள்ளிகூர், மூரட்டி,' உள்ளிட்ட கூட்டுறவு சங்க செயலாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.மேலும், வங்கி செயலாளர்கள் பணி காலியாக உள்ள, கெந்தொரை, மேலுார், ஆருகுச்சி, சாந்துார், சரஸ்வதி, தோடாஸ், அய்யன் உள்ளிட்ட சங்கங்களுக்கு சில வங்கி செயலாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் தயாளன் கூறுகையில்,''முதற்கட்டமாக, 23 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர்கள் பணியிட மாற்றம் மற்றும் சில சங்க செயலாளர் களுக்கு கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது. சங்கங்களை மேம்படுத்தி லாபம் ஈட்டி சிறப்பாக செயல்படுத்த அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது,'' என்றார்.

அரசியல் தலையீடு வேண்டாமே...

கூட்டுறவு சங்கம் மேம்பட கூட்டுறவு துறை எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கையை வங்கியில் உறுப்பினர்களாக உள்ள சிறு விவசாயிகள் வரவேற்றுள்ளனர். மறுபுறம் கூட்டுறவு யூனியன் சங்க நிர்வாகிகள் மற்றும் செயலாளர்கள் சிலர் பணியிட மாறுதலை ரத்து செய்ய கோரி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரை நேரில் சந்தித்து பேச சென்றனர். ஆனால், சந்திக்க முடியாததால் திரும்பி சென்றனர். அதே சமயத்தில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் மூலம் பணியிட மாறுதலை ரத்து செய்ய திட்டம் நடப்பதாக தெரியவந்துள்ளது. சங்க செயல்பாடுகள் மேம்பட கூட்டுறவு சங்க அதிகாரிகள் எடுத்த நடவடிக்கையை வங்கியில் உள்ள சிறு விவசாயிகள் வரவேற்றுள்ள நிலையில், ஆளுங்கட்சி நிர்வாகிகள் தலையிட வேண்டாம்,' என, பெரும்பாலான வங்கி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை