உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி /  இயற்கை முறையில் மலை காய்கறி சாகுபடி பயிற்சி கூடுதல் வருமானம் பெற விவசாயிகளுக்கு அறிவுரை

 இயற்கை முறையில் மலை காய்கறி சாகுபடி பயிற்சி கூடுதல் வருமானம் பெற விவசாயிகளுக்கு அறிவுரை

ஊட்டி: ஊட்டி அருகே, பாரஸ்ட் கேட் பகுதியில், முதல்முறையாக 'ஈஷா மண் காப்போம் இயக்கம்' சார்பில் மலை காய்கறிகள் சாகுபடி பயிற்சி நடந்தது. இந்த பயிற்சியில், முன்னோடி விவசாயிகளான தன்விஷ், சரவணன், கோபாலகிருஷ்ணன், ரமேஷ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் பங்கேற்று, 'மலை காய்கறிகளான கேரட், பீட்ரூட், காலிபிளவர், பிரக்கோலி, பீன்ஸ், அவரை,' உள்ளிட்ட பயிர்களுக்கான நிலம் தயாரித்தல் முதல் சாகுபடி, அறுவடை மற்றும் சந்தைப்படுத்துதல் வரை உள்ள பல்வேறு தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விளக்கினர். ரசாயன மருந்துக்கு தடை 'ஈஷா மண் காப்போம்' இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர், சேகர் மற்றும் தில்லை அரசன் ஆகியோர் விவசாயிகளை ஒருங்கிணைத்து, பயிற்சியை நடத்தினர். இந்த பயிற்சியில், மலை பகுதிகளில் விவசாயம் மேற்கொள்வோர் தங்கள் பயிர்களை பூச்சிகளிலிருந்து பாதுகாப்பது குறித்து விளக்கப்பட்டது. பூச்சிகளை கட்டுப்படுத்த அதிக செலவில் ரசாயன மருந்துகளை பயன்படுத்துவதற்குப் பதிலாக, ஆமணக்கு, சூரியகாந்தி, லுாபின் போன்ற பூச்சி தடுப்பு பயிர்களை உயிர்வேலியாக அமைத்தால் பூச்சித் தாக்குதலை இயற்கையாகக் கட்டுப்படுத்த முடியும் என அறிவுறுத்தப்பட்டது. கூடுதல் வருமானத்துக்கு வழி மேலும், வரப்புகளில் ராகி, தினை, லெமன் கிராஸ் போன்ற பயிர்களை வளர்த்து கூடுதல் வருமானம் ஈட்டும் வழிமுறைகள், சர்க்கரைப்பாகு மற்றும் தேங்காய் உருண்டையை எலி பொறிகளில் பயன்படுத்தி எலி தொல்லையிலிருந்து பயிர்களை பாதுகாப்பது குறித்தும் கள விளக்கம் அளிக்கப்பட்டது. பல அடுக்குப் பயிர் சாகுபடி வாயிலாக அதிக வருமானம் பெறும் முறைகளும் விளக்கப்பட்டன. இந்த பயிற்சி முகாமில், 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயனடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை