| ADDED : ஜன 08, 2024 11:05 PM
கோத்தகிரி;''பூமியில் பல்லுயிர் சூழல் பெருமளவு அழிந்துவிட்டது,'' என, மரம் நடும் விழாவில் கவலை தெரிவிக்கப்பட்டது.கோத்தகிரி கிரீனவேலி மெட்ரிக் மேல்நிலை பள்ளியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டம்; மரம் நடும் விழா நடந்தது.பள்ளி முதல்வர் கங்காதரன் வரவேற்றார். லயன்ஸ் கிளப் தலைவர் மோகன்குமார் தலைமை வகித்தார். பள்ளி தாளாளர் பிரசாத் கிருஷ்ணன், தொழிலதிபர் போஜராஜன் ஆகியோர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் அவசியம் குறித்து பேசினர்.கோத்தகிரி 'லாங்வுட்' சோலை பாதுகாப்பு குழு செயலாளர் ஆசிரியர் ராஜூ பேசியதாவது:மனிதனின் உணவு மாற்றம்; நவீன வாழ்க்கை; காடுகள் அழிப்பு போன்ற வற்றால், பூமியில் பல்லுயிர் சூழல் பெருமளவு அழிந்துவிட்டது.தொழில் புரட்சியின் விளைவாக, 'கார்பன் டை ஆக்சைடு' போன்ற பசுமை குடில் வாயுக்கள் அதிகரித்து, புவி வெப்பம் காலநிலை மாற்றம் போன்றவையால் இன்று பூமி பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.'பிளாஸ்டிக்' இன்று சுற்றுச்சூழலுக்கு ஆபத்தாக மாறியுள்ளது; தாய்ப்பாலிலும் மைக்ரோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்ட அபாய நிலை உருவாகி உள்ளது. இந்த பூமியை நம் வருங்கால சந்ததியினருக்கு பாதுகாத்து கொடுப்பது ஒவ்வொருவரின் கடமை. அதற்கான விழிப்புணர்வை மாணவர்கள் அனைத்து இடங்களிலும் ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.தொடர்ந்து, பள்ளி வளாகத்தில், 250 சோலை மர கன்றுகள் நடப்பட்டன. அதில், சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கண்ணன் ராமையா உட்பட பலர் பேசினர். செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.