சின்கோனா பகுதி குடியிருப்பு யானைகளால் சேதம்
பந்தலுார்;பந்தலுாஒர் அருகே சேரங்கோடு சின்கோனா பகுதியில் இரண்டு குட்டிகளுடன் ஐந்து யானைகள் முகாமிட்டு உள்ளன. நேற்று முன்தினம் இரவு, 11:00 மணிக்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதிக்கு வந்த யானைகள், கிருஷ்ணன் என்பவரின் வீட்டு சமையலறை மேல் கூரையை உடைத்து சேதப்படுத்தியது.மேலும், சமையலறை ஜன்னலை உடைத்து தும்பிக்கையை உள்ளே விட்டு சமையல் பொருட்களை வெளியே எடுத்து போட்டுள்ளது. இதுகுறித்து வீட்டில் உள்ளவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த வனக்குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து, யானைகளை குடியிருப்பு பகுதியில் இருந்து விரட்டினர். யானை கூட்டம் குடியிருப்பை ஒட்டிய புதர் பகுதியில் முகாமிட்டுள்ளது. இதனால், தொழிலாளர்கள் அச்சமடைந்து உள்ளனர். வனத்துறையினர் முகாமிட்டு யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மக்கள் கூறுகையில், 'பாதிக்கப்பட்ட குடியிருப்பின் உரிமையாளருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்,' என்றனர்.