கோவில் வளாகத்தில் சந்தன மரம் கடத்தல்
பந்தலூர் : நீலகிரி மாவட்டம், அய்யன்கொல்லி பஜார் அய்யப்பன் கோவில் வளாகத்தில் சந்தனம் மரம் வெட்டி கடத்தப்பட்டுள்ளது.கடந்த சில வாரங்களுக்கு முன் மசினகுடி சோதனைச் சாவடி அருகே ஒரு சந்தனமரமும், கூடலூர் - ஊட்டி சாலையில் கோக்கால் என்ற இடத்தில் மூன்று சந்தன மரங்களும் வெட்டி கடத்தப்பட்டுள்ளன. மசினகுடியில் மரம் வெட்டியது தொடர்பாக, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோக்கால் பகுதயில் மரம் வெட்டியது குறித்து வனத்துறையின் நடவடிக்கை, மூடி மறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பந்தலூர் அருகே அய்யன்கொல்லி பஜார் பகுதியை ஒட்டி அமைந்துள்ள அய்யப்பன் கோவில் வளாகத்திலிருந்த சந்தன மரம் ஒன்றும் வெட்டி கடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தும், கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. வனத்துறையினர் தொடர்ந்து மெத்தனமாக இருப்பதால், எஞ்சியிருக்கும் பல அரிய வகை மரங்களும் காணாமல் போகும் அபாயம் உள்ளது.