ஒருநாள் மழைக்கு கூட வெள்ளக்காடாக மாறும்.. இரண்டாம் சிரப்புஞ்சி! கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது கட்டாயம்
பந்தலுார்; ஒருநாள் மழைக்கு தாங்காத இரண்டாவது சிரப்புஞ்சியில், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாக மாறி உள்ளது. பந்தலுார் அருகே தேவாலா பகுதி, இரண்டாவது சிரப்புஞ்சி என்ற பெயரை கொண்டு உள்ளது. மேகாலயா மாநிலத்தில் உள்ள சிரபுஞ்சிக்கு அடுத்தபடியாக, மழை பொழிவு மற்றும் குளிரான காலநிலை நிலவி வந்த பகுதி, காலநிலை மாற்றம், இயற்கை சூழல் அழிவு போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. மழையின் போது வெள்ளம் சூழ்ந்து வருவது வாடிக்கையாகி விட்டது. மேலும், இதன் அருகே உள்ள, பந்தலுார் பகுதியில் கடந்த ஆண்டு ஆக., மாதம் ஒரு மணி நேரம் பெய்த, 28 செ.மீ. மழையால் வெள்ளபெருக்கு ஏற்பட்டு, குடியிருப்புகள், விவசாய தோட்டங்கள் நீரில் மூழ்கி சேதம் ஏற்பட்டது. விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். கட்டமைப்பு வசதிக்கு குரல் அப்போதே, 'உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து, மழை நீர் வழிந்தோட உரிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே உள்ள, மழைநீர் வடிகால்களை சீரமைக்க வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது. ஆனால், மழையின் போது வந்த ஆய்வு செய்த அதிகாரிகள், வெயில் வந்த பின் 'காணாமல்' போயினர். இந்நிலையில், கடந்த, 28-ம்தேதி மாலையில், இரண்டு மணிநேரம் பெய்த கனமழையின் போது, 14 செ.மீ. மழைபதிவானது. சாலைகள், கடைகள், குடியிருப்புகள் மற்றும் விவசாய தோட்டங்களில் மழை வெள்ளம் புகுந்து பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தியது. பஜாரில் செயல்படும் தனியார் மருத்துவமனைக்குள் மழை நீர் புகுந்தது. தண்ணீர் வடிந்து செல்ல, 24 மணிநேரம் ஆனாது. காணாமல் போன வடிகால் அமைப்புகள் இதற்கு காரணம், மழை காலங்களில் வெள்ளம் வடிந்து செல்ல கடந்த காலங்களில் கட்டப்பட்ட, 40க்கும் மேற்பட்ட வடிகால் அமைப்புகளை காணவில்லை. நீரோடைகள்; ஆற்றுபடுகைகளில் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் மழைநீர் தேங்க காரணமாக மாறி உள்ளன. அத்துடன் இப்பகுதியில் உள்ள சதுப்பு நிலங்கள் மற்றும் தோட்டங்கள் கட்டட காடுகளாக மாறி இயற்கை சூழலை அழிந்துள்ளன. இதனால், ஒரே நேரத்தில் அதிக மழை, மேகவெடிப்பு ஏற்பட்டால் இப்பகுதி யில் பேரிடர் ஏற்படும் அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.
தாமதப்படுத்தினால் பேரிடர்
ஓய்வு பெற்ற உதவி மண்வள பாதுகாப்பு அலுவலர் சுந்தரலிங்கம் கூறுகையில், ''இப்பகுதியில், கால்வாய், கிளை நீரோடைகள் அதனை சார்ந்த ஆறுகளை துார் வாரி சீரமைக்க வேண்டும். ஏற்கனவே பேரிடர் பாதிப்பு பட்டியலில் நீலகிரி மாவட்டம் உள்ள நிலையில், பெரும் மழையின் போது, கிடைக்கும் வழித்தடங்களில் வெள்ளம் வழிந்தோடி பாறைகள் மற்றும் செங்குத்தான மலைப்பகுதிகளில் புகுந்தால் நிச்சயம் நிலச்சரிவுகள் ஏற்படும். எனவே, வடிகால் அமைப்புகளை சீரமைக்க வேண்டும் மற்றும் தண்ணீர் வழிந்தோட புதிய கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த வேண்டியது அவசியம். தாமதப்படுத்தினால் பேரிடர் ஏற்படும்,'' என்றார்.
கோடையில் துார்வார வேண்டும்
வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பூபாலன் கூறுகையில், ''கூடலுார் மற்றும் பந்தலுார் பகுதிகள் சரிவான மற்றும் சதுப்பு நிலப் பகுதிகளை உள்ளடக்கி உள்ளது. ஆறுகள், நீரோடைகளில் குப்பைகளை கொட்டுவதாலும், ஆக்கிரமிப்பு செய்வதாலும் தண்ணீர் வழிந்தோட தடை ஏற்படுகிறது. மக்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். தற்போதுள்ள கால்வாய்கள், நீரோடைகள், ஆறுகளை கோடை காலங்களில் துார் வாரி தண்ணீர் வழிந்தோட ஏதுவாக சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.