குன்னுார் : 'மலை பகுதியில் செங்குத்தான பகுதியில் மண்ணை தோண்டும் போது, தொழிலாளர் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்,' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் மலை பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள பல்வேறு விதிமுறைகள் வகுத்து, 1993 ல் மாஸ்டர் பிளான் சட்டம் கொண்டுவரப்பட்டது. மலை பகுதிகளில், 7 மீட்டர் உயரத்திற்குமேல் கட்டடம் கட்ட கூடாது; 1500 சதுர அடிக்குள் கட்ட உள்ளாட்சி அனுமதி வழங்கவது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகள் வகுக்கப்பட்டன. எனினும் மாவட்டத்தில் விதிமீறல்கள் அதிகரித்து வருகிறது. விதிமீறலால் தொடரும் உயிர்பலி
* 2014 மே 2ம் தேதி குன்னுார் ஸ்டான்லி பார்க் அருகே தடுப்பு சுவர் கட்டுமான பணியின் போது இருவர் மண்ணில் புதைந்து உயிரிழந்தனர்.* எடப்பள்ளி மேல்கரன்சி டிரம்ளா எஸ்டேட்டில் தேயிலை தோட்டத்தை அழித்து காட்டேஜ்கள் கட்டுமான பணியின் போது, கடந்த, 2016ம் ஆண்டு டிச., 22ம் தேதி தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததில், 5 தொழிலாளர்கள் மண்ணில் புதைந்தனர். அதில், நான்கு பேர் உயிரிழந்தனர். அப்போதைய கலெக்டராக இருந்த சங்கர் ஆய்வு செய்து இந்த பகுதிகளில் கட்டடங்களில் உள்ள விதிமீறல்கள் மற்றும் பாறைகள் உடைக்கப்பட்டது தொடர்பாக ஆய்வு நடத்த உத்தரவிட்டார். இது தொடர்பாக, 8 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு நடந்து வருகிறது. அதன் பிறகு மீண்டும் அந்த பகுதிகளில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டன.* 2017 ஜூன் 10ம் தேதி குன்னுார் லேம்ஸ்ராக் சாலை அருகே, சி.எம்.எஸ்., பகுதியில் தனியார் எஸ்டேட் நிர்வாகம் சாலை அமைத்து தடுப்பு சுவர் கட்டும் பணியின் போது, மண் சரிவு ஏற்பட்டதில் ஒருவர் மண்ணில் புதைந்தார், ஒருவர் காயமடைந்தார். இந்த சம்பவத்தில் வனப்பகுதிக்கு அருகே நடந்த பணி என்பதால் மேற்கொண்டு பணிகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டது. விழிப்புணர்வு அவசியம்
முன்னாள் தீயணைப்பு நிலைய அலுவலர் மோகன் கூறுகையில், ''மலைப்பகுதிகளில் கட்டுமான பணியின் போது, 90 டிகிரி செங்குத்தாக மண் தோண்டும் போது தான், பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. மேலும் சிலர் அவசர கதியில் கட்டுமானங்களை கட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். தொழிலாளர் பாதுகாப்பு குறித்து கவலை படுவதில்லை. கட்டட பொறியாளர்கள் நிலத்தின் தன்மையை அறிந்து, அதற்கேற்ற வகையில் தொழிலாளர்கள் பாதுகாப்பு ஏற்படுகளுடன் பணிகளை செய்ய வேண்டும்,'' என்றார்.
லஞ்சம்; ஊழல் காரணம்!
லஞ்சம் இல்லாத நீலகிரி அமைப்பு ஒருங்கிணைப்பாளர் மனோகரன் கூறுகையில்,''மலை பகுதிகளில் பணம் படைத்தவர்கள் கட்டும் பெரிய கட்டட கட்டுமான பணிகளுக்கு, உள்ளாட்சி அமைப்பினர், சில அதிகாரிகள் குறிப்பிட்ட இடத்தில் எவ்வித ஆய்வுகள் செய்யாமல் லஞ்சத்தின் அடிப்படையில் அனுமதியை வழங்குகின்றனர். இதனால், உயிர்பலிகள் தொடர்கிறது. பெரிய அளவிலான கட்டுமான பணிகள் நடககும் போது, மாவட்ட கலெக்டர் தலைமையில் உயர் மட்ட குழு அமைத்து ஆய்வுகளை செய்ய வேண்டும். ஊழலை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.