| ADDED : ஜன 24, 2024 11:53 PM
கூடலுார் : தெப்பக்காடு பகுதியில் காட்டு யானையை பார்த்து கோபமடைந்த வளர்ப்பு யானை 'முதுமலை' தனது தந்தத்தை தரையில் குத்தியதிய போது, ஒரு தந்தம் உடைந்தது.முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு மற்றும் அபயாரண்யம் யானைகள் முகாமில், 27 வளர்ப்பு யானைகள் பராமரித்து வருகின்றனர். இங்கு, 58 வயது கடந்த யானைகளுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு பராமரித்து வருகின்றனர். அதன்படி, 58 வயது கடந்த வளர்ப்பு யானை 'முதுமலைக்கு' கடந்த ஆண்டு ஆக., மாதம் ஓய்வு வழங்கி, பராமரித்து வருகின்றனர்.பாகன் பொம்மன், இந்த யானையை வழக்கம் போல நேற்று முன்தினம், இரவு தெப்பக்காடு பகுதியில் கட்டி வைத்துள்ளார். நேற்று அதிகாலை, 2:30 அப்பகுதிக்கு வந்த காட்டு யானையை பார்த்து கோபமடைந்த, வளர்ப்பு யானை முதுமலை, சில அடிகள் நகர்ந்து கோபத்தில் தந்தங்களை தரையில் குத்தி உள்ளது. அப்போது, அதன் வலது புற தந்தம் உடைந்து விழுந்தது. யானையின் சப்தம் கேட்டு வந்த பாகன், அதனை சமதானப்படுத்தி, அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். தொடர்ந்து, முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ் தலைமையில் மருத்துவ குழுவினர் யானைக்கு சிகிச்சை மேற்கொண்டனர். தேவையான மருந்துகளை உணவு மூலம் வழங்கி, கண்காணித்து வருகின்றனர். முதுமலை துணை இயக்குனர் வித்யா, யானையை பார்வையிட்டு சம்பவம் குறித்து கேட்டறிந்தார். இச்சம்பவம் வனத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.வனத்துறையினர் கூறுகையில், 'வளர்ப்பு யானை முதுமலைக்கு பார்வையில் பாதிப்பு உள்ளது. இரவு காட்டு யானை வந்த போது, அதனை உணர்ந்து கோபத்தில், தரையில் தந்தத்தை குத்தியதால் ஒரு தந்தம் உடைந்துள்ளது. 'அதற்கான சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறோம். உடலில் வேறு எந்த பாதிப்பும் இல்லை. நன்றாக உள்ளது. வழக்கம் போல உணவு உட்கொண்டு தண்ணீர் குடித்து வருகிறது,' என்றனர்.