உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நீலகிரி / நுால்களுக்கு போதிய விலை கிடைக்காததால் தள்ளாடும் மில்கள்! 25 சதவீதம் நூற்பாலைகள் தற்காலிகமாக நிறுத்தம்

நுால்களுக்கு போதிய விலை கிடைக்காததால் தள்ளாடும் மில்கள்! 25 சதவீதம் நூற்பாலைகள் தற்காலிகமாக நிறுத்தம்

மேட்டுப்பாளையம் : சிறு மில்களில் உற்பத்தி செய்யப்படும் நுால்களுக்கு போதிய விலை கிடைக்காததால், நூற்பாலைகள் தொடர்ந்து இயங்க முடியாத நிலை உருவாகியுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் என கோவை மண்டலத்தில் மட்டும் சுமார், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறு, நூற்பாலைகள் உள்ளன. இதில் கோவை புறநகர் பகுதிகளான மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், பெரியநாயக்கன்பாளையம், சோமனூர் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் 500க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் இயங்கி வருகின்றன. இதில் குறிப்பாக அன்னூர் தாலுக்காவில் கரியாம்பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், கணேசபுரம், குன்னத்தூர், பசூர், கஞ்சப்பள்ளி, கோவில்பாளையம், எல்லப்பாளையம், குரும்பபாளையம், வெள்ளானைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 120க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் உள்ளன.

அபாயம்

இந்த நூற்பாலைகளில் பெருவாரியாக கிராமப்புற பெண் தொழிலாளர்களும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பணிபுரிந்து வருகின்றனர்.மின்கட்டண உயர்வு, உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், நூற்பாலைகள் தொடர்ந்து இயக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால், கிராமப்புற தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் செயலாளர் ஜெகதீஸ் சந்திரன் கூறியதாவது:மின் கட்டணம் உயர்வு, பங்களாதேஷ், சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்து கட்டுப்பாடின்றி நூல் மற்றும் துணிகள் இறக்குமதி, பஞ்சு கொள்முதல் விலைக்கு ஏற்ப நூல் உற்பத்தி செலவில் லாபம் இல்லாதது போன்ற பல்வேறு காரணங்களால் சிறு, குறு நூற்பாலைகள் தள்ளாடிக்கொண்டிருக்கின்றன.

நஷ்டம்

40ம் நம்பர் நூல் உற்பத்தியில் கிலோ ஒன்று ரூ.10 முதல் ரூ.20 வரை நஷ்டம் அடைகிறது. தமிழக மின் உற்பத்தி கழகம், மேக்ஸிமம் டிமாண்ட் கட்டணத்தை பிற மாநிலங்களை விட அதிகமாக வசூலிக்கிறது. நிறுவனங்களால் சொந்த செலவில் அமைக்கப்படும் ரூப் டாப் சோலார் மின்சாரத்திற்கு, கட்டணம் கேட்கப்படுகிறது. இது எந்த விதத்தில் நியாயம். சோலார் மின்சக்தியை ஊக்குவிக்காமல், அதற்கு எங்களிடமே கட்டணம் கேட்பது அதிர்ச்சியளிக்கிறது.நூற்பாலைகள் சில மாதங்களாகவே, தங்களது நூல் உற்பத்தியை குறைத்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் 25 சதவீதம் நூற்பாலைகள் தங்களது இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி உள்ளன. பல நூற்பாலைகள் மாதத்தில் பாதி நாட்கள் தான் இயங்குகிறது. இதனால் பல்லாயிரக்கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நூற்பாலைகள் மூடுவிழா நோக்கி செல்லும் நிலை ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஊரக பொருளாதாரம் பாதிக்கும்

இதுகுறித்து, சிறு, நூற்பாலை உரிமையாளர்கள் சிலர் கூறியதாவது:-இந்தியாவில் விவசாயத்திற்கு அடுத்தப்படியாக ஜவுளி தொழில் உள்ளது. அதில் நூற்பாலைகள் பங்கு அதிகம் உள்ளன. பல லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை இத்தொழில் வழங்கி வருகிறது. இத்தொழிலை மேம்படுத்தினால் தமிழக அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். தமிழக அரசு மின் கட்டணத்தை குறைக்க வேண்டும். மத்திய அரசு துணிகள் இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும். இதே நிலை நீடித்தால் ஊரக பகுதிகளில் நூற்பாலைகள் மூடப்பட்டு, ஊரக பொருளாதாரம் பாதிக்கப்படும், என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி