நிலச்சரிவில் உயிரிழந்த மூவரின் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
கூடலுார் : கேரளா மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில், உயிரிழந்த கூடலுாரை சேர்ந்த மூவர் குடும்பங்களுக்கு தலா, 10 ஆயிரம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டது.கேரளாவில் ஏற்பட்ட பேரிடரால், வயநாடு பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில், சிக்கி, 400 பேர் உயிரிழந்தனர். அதில், அங்கு தங்கி பணியாற்றி வந்த, கூடலுார் மரப்பாலம் அட்டிகொல்லி பகுதியை சேர்ந்த காளிதாஸ்; பந்தலுார் அய்யன்கொல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்யாணகுமார்; கையுன்னியை சியாபுதீன் ஆகியோரும் உயிரிழந்தனர்.அவர்களின் குடும்பத்துக்கு, நீலகிரி மாவட்ட நீதிபதி மற்றும் நீதித்துறை ஊழியர்கள் சார்பில், நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி, கூடலுார் சார்பு நீதிமன்றத்தில் நேற்று நடந்தது.மாவட்ட நீதிபதி அப்துல்காதர் தலைமை வகித்து, வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்த காளிதாசின் தாய் பார்வதி; கல்யாணகுமாரின் மனைவி மஞ்சுளா; சியாபுதீன் மனனவி சல்மா ஆகியோருக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை வழங்கி ஆறுதல் கூறினார்.சார்பு நீதிபதி முகமது அன்சாரி, மாஜிஸ்திரேட் சசின்குமார், வக்கீல் சங்க தலைவர் சாக்கோ, மாவட்ட நீதிமன்ற கண்காணிப்பாளர் யோகராஜ், கூடலுார் நீதிமன்ற கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன், வக்கீல்கள், கோர்ட் ஊழியர்கள் பங்கேற்றனர்.