தெற்கு வனச்சரகரிடம் ரூ. 5 லட்சம் கணக்கில் வராத பணம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை
ஊட்டி: ஊட்டி தெற்கு வனச்சரக அலுவலரிடம் இருந்து கணக்கில் வராத, 5 லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலகிரி வன கோட்டத்தில், ஊட்டி தெற்கு, வடக்கு, குன்னுார், கோத்தகிரி உட்பட,12 வனச்சரகங்கள் உள்ளன. இதில், ஊட்டி தெற்கு வனச்சரக அலுவலகத்தில் கிருஷ்ணகுமார் வனச்சரகராக கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களாக மரம் வெட்ட ஒப்பந்தம் கொடுக்கும் பணிகள், வனப்பகுதியை ஒட்டிய நிலங்களில் தங்கும் விடுதிகள் கட்டும் பணிகளில் பல்வேறு விதிமுறைகள் நடப்பதாகவும், இதற்காக பல்வேறு குளறுபடிகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து உயர் அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு மற்றும் சிறப்பு தாசில்தார் சிவக்குமார் தலைமையிலான குழுவினர் வனச் சரக அலுவலகத்தில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில், வனச்சரகர் கிருஷ்ணகுமாரிடம் கணக்கில் வராத, 5.20 லட்சம் ரூபாய் மற்றும் வனவர் கோபாலகிருஷ்ணனிடம், 17 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வனச்சரக அலுவலர் கிருஷ்ணகுமார் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர். இவர், 2023ல் கொடைக்கானலில் இருந்து ஊட்டி தெற்கு வனச்சரக அலுவலகத்திற்கு பணி மாறுதலில் வந்தார்.