கழிவுநீர் தொட்டியில் சிக்கிய காட்டெருமை பலி; வனத்துறை மெத்தனத்தால் பரிதாப மரணம்
குன்னுார்; குன்னுார் அருகே கழிவுநீர் தொட்டியில் சிக்கி, 12 மணி நேரம் போராடிய காட்டெருமை, பரிதாபமாக உயிரிழந்தது.குன்னுார் கேத்தி பாலாடா பகுதியில் வடமாநில தொழிலாளர்கள் குடியிருந்து வருகின்றனர். இங்குள்ள கழிவுநீர் தொட்டியில் நேற்று அதிகாலைக்கு காட்டெருமை சிக்கியது. அதில், காட்டெருமையின் வயிறு மற்றும் பின்னங்கால் முழுவதும் கழிவுநீர் தொட்டியில் இருந்து வெளியே எடுக்க முடியாமல் தவித்தது. இது தொடர்பாக, இப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.தகவலின் பேரில். அங்கு வந்த குந்தா வனத்துறையினர், 'காட்டெருமையை பொக்லைன் மூலம் மீட்க, 20 ஆயிரம் ரூபாய் செலவு ஆகும் அதனை வழங்க வேண்டும்,' என, தெரிவித்துள்ளனர். தொகையை மக்களுக்கு வழங்க முடியாத நிலையில், அதனை வனத்துறையினர் மீட்காமல் விட்டு சென்றனர். இந்திலையில், காட்டெருமை நேற்று மாலை, 5:00 மணியளவில் பரிதாபமாக உயிரிழந்தது.மக்கள் கூறுகையில்,'வனத்துறைக்கு தகவல் அளித்தும், நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டியதால், 12 மணி நேரமாக போராடிய காட்டெருமை பரிதாபமாக உயிரிழந்தது. வனத்துறையினரின் மெத்தனத்தால் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது வனத்துறைக்கு மட்டுமின்றி அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது,'என்றனர்.