| ADDED : ஏப் 23, 2024 11:01 PM
குதிரை வாகனத்தில் அழகரை வரவேற்ற பக்தர்கள்பரமக்குடி- பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் (அழகர்) கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் அதிகாலை 3:30 மணிக்கு பூப் பல்லக்கில் வைகை ஆற்றில் இறங்கினார்.பரமக்குடி சவுராஷ்டிரா பிராமணர் மகா ஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானத்தை சேர்ந்த சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது.இக்கோயிலில் ஏப்.18ல் காப்பு கட்டுதலுடன் சித்திரை திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் காலை பெருமாள் மற்றும் கருப்பணசாமிக்கு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. அன்று நாள் முழுவதும் பல ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, தங்க நெல் மணி தோரணங்கள் சூடி, வில், வாள், கத்தி, கேடயம், குத்துவாள், வளரி, தடி ஏந்தி கள்ளழகர் திருக்கோலத்தில் எழுந்தருளினார்.நேற்று அதிகாலை 1:00 மணிக்கு மல்லிகை, கனகாம்பரம் என விதவிதமான பூக்கள் கட்டிய பல்லக்கில் அமர்ந்தார். 1:30 மணிக்கு தன் ஆஸ்தானத்தை விட்டு வெளியேறிய அழகர் கருப்பணசாமியிடம் விடைபெறும் நிகழ்ச்சி நடந்தது.பக்தர்களின் இடைவிடாத கோவிந்தா கோஷம் முழங்க 3:30 மணிக்கு அழகர் அரக்கு பட்டு உடுத்தி, வெள்ளி கிண்ணத்தில் அவல் பாயாசம் சாப்பிட்டபடி வைகை ஆற்றில் இறங்கினார். இதனால் விவசாயம் நன்கு செழித்து ஊர் மக்கள் நல்ல சுபீட்சத்துடன் இருப்பார்கள் என அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.பின்னர் பல்வேறு மண்டக படிகளில் சேவை சாதித்தபடி அழகர் தல்லாகுளம் மண்டகப்படியை அடைந்தார். காலை 9:00 மணிக்கு குதிரை வாகனத்தில் அலங்காரமாகிய அழகரை தல்லாகுளத்தில் இருந்து பல ஆயிரம் பக்தர்கள் துருத்தி என்னும் பீச்சாங்குழல் மூலம் மஞ்சள் நீரை பீய்ச்சி வரவேற்றனர். தொடர்ந்து காட்டு பரமக்குடி, மஞ்சள் பட்டணம் சென்று மதியம் 2:00 மணிக்கு ஆற்றுப்பாலம் அருகில் ஆயிரம் பொன் சப்பரத்தில் அமர்ந்தார். அங்கு பக்தர்கள் வடம்பிடித்து சப்பரத்தை ஆற்றில் 2 கி.மீ., இழுத்துச் சென்றனர். பின்னர் பரமக்குடி பெரிய கடை வீதி உட்பட முக்கிய வீதிகளில் வந்து, எமனேஸ்வரம், தரைப்பாலம் என பல நுாறு மண்டகப்படிகளில் சேவை சாதித்தார்.இரவு 1:00 மணிக்கு மேல் காக்காத் தோப்பு எனும் வண்டியூர் காக்கா தோப்பு சோலையை அடைந்தார். அங்கு வாண வேடிக்கைகள் முழங்க அழகரை வரவேற்றனர். தொடர்ந்து 18ம் படி கருப்பணசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்த பின் கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் சேர்க்கை ஆனார். அப்போது சந்தன அபிஷேகம் நடந்தது. இன்று அழகர் சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்து, தசாவதார சேவையில் அருள்பாளிக்க உள்ளார். ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான மானேஜிங் டிரஸ்டி ரெங்காச்சாரி, டிரஷரர் நீலகண்டன், டிரஷ்டிகள் ரமேஷ்பாபு, கிரிதரன், கோவிந்தன் உள்ளிட்ட விழாக் குழுவினர் செய்திருந்தனர்.