ராமநாதபுரம்: ராமநாதபுரம் பழைய கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு முன்னிலை வகித்தார்.மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ஒருவருக்கு சக்கர நாற்காலி, 5 பேருக்கு தையல் இயந்திரங்களை கலெக்டர் வழங்கினார். சில மனுக்கள் விபரம்: மதுக்கடையை மூடுங்க
ராமநாதபுரம் அருகே அழகன்குளம் ஊராட்சி நாடார்வலசை தெருவில் அரசு மதுபானக்கடை செயல்படுகிறது. இக்கடையில் மது அருந்தும் போதை ஆசாமிகள் தகாத வார்த்த பேசுகின்றனர். இதனால் பள்ளி மாணவிகள், பெண்கள் ரோட்டில் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே இந்த மதுக்கடையை மூடுவதற்கு கலெக்டர் உத்தரவிட வேண்டும், என மனு அளித்தனர். மகளிர் உரிமை வரவில்லை
அழகன்குளம் கிராம பெண்கள், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்மாவட்ட தலைவர் ஈஸ்வரி தலைமையில் அளித்த மனுவில், ஊரில் தகுதியான பல பெண்களுக்கு அரசின் மகளிர் உரிமைத்தொகை வழங்கவில்லை. உரிமைதொகை வழங்க வேண்டும் என்றனர். மண்அள்ளுவதில் முறைகேடு
சாயல்குடி சமூக ஆர்வலர் முனியசாமி அளித்த மனுவில், சாயல்குடி கண்மாயில் மண் எடுக்க சிலர் அனுமதி பெற்றுஉள்ளனர். இதனை அதிகாரிகள் ஆய்வு செய்யாததால் 7 முதல் 10 அடி வரை மண் எடுத்துஉள்ளனர். முறைகேட்டில் ஈடுபடுவோர்மீது கலெக்டர்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேல்நிலைதொட்டி வேண்டும்
கடலாடி தாலுகா பெரியகுளம் கிராம மக்கள் தி.மு.க., கிளைச்செயலாளர் சேதுராமலிங்கம் தலைமையில் மனு அளித்தனர். அதில் காவிரி குடிநீர்திட்டத்தில் பெரியகுளம்ஊராட்சிக்கு 2 மேல்நிலைத்தொட்டி அமைக்கப்படுகிறது. இதில் ஒன்றை வடக்கு பெரியகுளத்தில் கட்டவேண்டும். தனிநபர் ஆதாயத்திற்காக 5 கி.மீ., தள்ளி பாலம் அருகே கட்டுகின்றனர். இதை நிறுத்தி வடக்கு பெரியகுளம் சீனிநாதபுரத்தில் கட்ட வலியுறுத்தினர்.இதே போல பட்டா மாறுதல், உதவித்தொகை, வேலை வாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 371 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்களுக்கு அதிகாரிகள் விரைவில் தீர்வுகண்டு, இனிவரும் வாரங்களில் குறைதீர் கூட்டத்தில் மீண்டும், மீண்டும் வரும் மனுக்களை குறைக்க புதிய கலெக்டர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.