| ADDED : ஜூலை 23, 2024 04:46 AM
கீழக்கரை: ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக ஆனைகுடி, மோர்க்குளம், முஸ்லிம் மோர்க்குளம், தில்லையேந்தல், பாளையேந்தல் உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்லும் 1- ஏ டவுன் பஸ் தாமதமாக வருவதால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் சிரமப்படுகின்றனர்.திருப்புல்லாணியில் இருந்து ஆனைகுடி வழியாக வந்து மோர்குளம் உள்ளிட்ட ஏழுக்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய வழித்தடத்தில் அரசு டவுன் பஸ் காலதாமதமாக வருவதால் பயனின்றி உள்ளதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். மோர்க்குளத்தைச் சேர்ந்த விவசாயி பழனிச்சாமி கூறியதாவது:ராமநாதபுரத்தில் இருந்து திருப்புல்லாணி வழியாக ஆனைகுடி மோர்க்குளம் உள்ளிட்ட ஏழு கிராமங்களை இணைத்து கீழக்கரை கிழக்கு கடற்கரை சாலை வழியாக பஸ் ஸ்டாண்ட் செல்வது வழக்கம். இப்பகுதியில் சாலை வசதி நல்ல நிலையில் உள்ளது.வழித்தடம் எண் 1 ஏ டவுன் பஸ் காலை 8:00 மணிக்குள் வரவேண்டும். ஆனால் வரும் போது 9:00 மணியாகிவிடுகிறது. இதனால் பள்ளி கல்லூரி மாணவர்கள் அவசர தேவைக்காக வாடகை வாகனங்களிலும், டூவீலர்களிலும் பயணம் செய்கின்றனர்.எனவே பள்ளி, கல்லூரிமாணவர்களுக்கு குறிப்பிட்டநேரத்தில் அரசு டவுன் பஸ் கூடுதல் எண்ணிக்கையில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது குறித்து கிளை மேலாளருக்கு மனு அளித்துஉள்ளேன் என்றார்.