| ADDED : டிச 01, 2025 07:04 AM
ஆர்.எஸ்.மங்கலம்: மாவட்டத்தில் பருவமழை காரணமாக நெல் விவசாய பணியை விவசாயிகள் தீவிரப்படுத்தி உள்ளனர். மாவட்டத்தில், மானாவாரியாக பருவ மழையை எதிர்பார்த்து கடந்த செப்., மாதத்தில், நேரடி நெல் விதைப்பு செய்யப் பட்டது. அப்போது நிலவிய ஈரப்பதத்தில் நெல் பயிர்கள் முளைத்த நிலையில், அதன் பின்பு போதிய மழைப்பொழிவு இல்லாததால், முளைத்த நெல்பயிர்கள் வறட்சியின் பிடியில் சிக்கின. இதனால் விவசாயிகள் களை பறித்தல், களைக்கொல்லி மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணி களுடன் மேற்கொண்டு அடுத்தகட்ட விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாமல் பருவமழையை எதிர்பார்த்து ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை, முதுகுளத்துார், பரமக்குடி உள்ளிட்ட சுற்றுப்புற பகுதி விவசாயிகள் காத்திருந்தனர். வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக, கடந்த ஒரு வாரமாக மாவட்டத்தில், கனமழை பெய்ததால், மாவட்டத்தில் நெல் வயல்களில் மழை நீர் தேங்கின. இதனால், நெல் சாகுபடி செய்த விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். நேற்று மழை இல்லாததால் விவசாயிகள் உரம் இடுதல், வயல் வரப்புகளை சீரமைத்து தண்ணீரை தேக்குதல் உள்ளிட்ட பணிகளில் தற்போது தீவிரம் காட்டி வருகின்றனர்.