| ADDED : ஜன 07, 2024 02:20 AM
ராமேஸ்வரம்:ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடற்கரையில் மியான்மர் பக்தர்கள் வழிபட்டு கடலில் விட்ட புத்தர் தெப்பம் ஒதுங்கியது.ராமேஸ்வரம் ஓலைகுடா பிசாசுமுனை கடற்கரையில் 15 அடி நீளம் 15 அடி அகலத்தில் புத்தர் கோயில் கோபுரம் போல் வடிவமைத்த தெப்பம் மிதவை கேன்கள் மூலம் கரை ஒதுங்கியது. இதனை மரைன் போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.இதில் ஒரு அடி உயரத்தில் புத்தர் சிலையும், சிறிய அளவில் புத்தரின் சீடர்கள் இருப்பது போல் மூன்று சிலைகள் இருந்தன. மியான்மர் கியோகாமி நகரில் உள்ள புத்தர் கோயிலில் இந்த தெப்பத்தை வடிவமைத்து பக்தர்கள் பூஜை செய்து, தரிசித்து பவுர்ணமியான டிச.,26ல் கடலில் விட்டுள்ளனர். இது தற்போது வீசும் வடகிழக்கு சூறாவளிக்காற்றின் வேகத்தில் நேற்று ராமேஸ்வரத்தில் கரை ஒதுங்கியது. இதே போல் மற்றொன்று இரு நாட்களுக்கு முன் இலங்கை யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்கரையில் ஒதுங்கியுள்ளது. திருட்டு
இந்த தெப்பம் அடியில் 200 லி., கொள்ளளவு கொண்ட 12 மிதவை கேன்கள் கயிற்றில் கட்டப்பட்டிருக்கும். ஆனால் ராமேஸ்வரத்தில் ஒதுங்கிய தெப்பத்தில் அனைத்து மிதவை கேன்களையும் சிலர் திருடிச்சென்றுள்ளனர். மேலும் புத்தர் சிலை அருகில் காணிக்கையாக வைத்திருந்த விலைமதிப்புள்ள பொருள்களையும் மர்ம நபர்கள் எடுத்திருப்பர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.மரைன் போலீசார் விசாரிக்கின்றனர்.