சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியாருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9000 அபராதம் விதிக்கப்பட்டது.சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே ஆண்டிச்சி ஊரணியை சேர்ந்தவர் ஜான் ராபர்ட் 46. இவர் மண்டபம் கோயில்வாடியில் உள்ள புனித அருளானந்தர் சர்ச்சில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார். 2022 ஜூலை 21ல் வழிபாட்டிற்கு வந்த மூன்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.இது குறித்து குழந்தைகள் நலக்குழுவுக்கு புகார் சென்றது. சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜ் போலீசில் புகார் அளித்தார். மண்டபம் போலீசார் போக்சோ வழக்கில் ஜான்ராபர்ட்டை கைது செய்தனர்.இந்த வழக்கு ராமநாதபுரம் மாவட்ட விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்தது. ஜான்ராபர்ட்டுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.9000 அபராதம் விதித்து நீதிபதி கவிதா தீர்ப்பளித்தார்.