ராமநாதபுரம் கண்மாய் தென் கலுங்கு ஷட்டரில் வீணாக வெளியேறும் நீர்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் பெரிய கண்மாய் தென் கலுங்கில்சேதமடைந்த ஷட்டர் வழியாக கண்மாயில் சேமிக்கப்பட்ட தண்ணீர் வீணாகிறது. ராமநாதபுரம் பெரிய கண்மாய் காருகுடி பகுதியில் துவங்கி லாந்தை வரை 12 கி.மீ., நீளம் 200 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 8.24 சதுர மைல் நீர் பிடிப்பு பகுதியில் 618 மில்லியன் கன அடி நீரை சேமிக்க முடியும். இந்த கண்மாய் மழைநீர் வரத்துக் கால்வாய், கண்மாய் பகுதி ஆண்டுகளாகதுார்வாரப்படாமல் உள்ளது. இதனால் நீர் பிடிப்பு பகுதி பாதியாக குறைந்து விட்டது. இந்நிலையில் பொதுப்பணித்துறை நீர் வள ஆதுாரத்துறை அதிகாரிகள் கண்மாய் கலுங்குகள், ஷட்டர்களை முறையாக பராமரிப்பு செய்யவில்லை. தற்போது கண்மாய் பகுதியில் 4 அடி உயரத்திற்கு நீர் நிரம்பியுள்ளது.தற்போது வைகை அணையிலிருந்து ராமநாதபுரம் கண்மாய் பகுதிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தென் கலுங்கு ஷட்டர் பகுதியில் ஏற்பட்ட இடைவெளி காரணமாக கண்மாயில் தேங்கியுள்ள நீர் வெளியேறுகிறது. முறையாக ஷட்டர் பராமரிப்பு செய்யாததே காரணம்.ஷட்டர்கள் சேதமடைந்து உடைந்து நொறுங்கும் நிலையில் உள்ளது. அதிகாரிகள் இதனை சீரமைக்கும் பணிகளை செய்யாமல் அலட்சியம் காட்டி வருகின்றனர். கண்மாயில் தேக்கப்பட்ட நீர் ஷட்டர் பகுயில் வெளியேறி வருகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கலுங்கு ஷட்டர்களை சீரமைத்து வரத்து கால்வாய்களை துார் வார வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.