ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு செப்.26 வரை காவல் நீட்டிப்பு
ராமேஸ்வரம்:இலங்கை சிறையில் உள்ள ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேருக்கு செப்., 26 வரை சிறைக் காவலை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜூலை 28ல் ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் சேகர், மோபின், சைமன், டெனிசன், ஜஸ்ரின் ஆகியோரை இலங்கை கடற்படை வீரர்கள் கைது செய்து வவுனியா சிறையில் அடைத்தனர். கோர்ட் வாய்தா நாளான நேற்று மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். நீதிபதி செப்., 26 வரை சிறைக் காவலை நீட்டித்து உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்களை மீண்டும் போலீசார் சிறையில் அடைத்தனர். தொடர்ந்து 53 நாட்களாக சிறையில் இருந்த மீனவர்கள் விடுவிக்கப்படலாம் என மீனவர் குடும்பத்தினர் எதிர்பார்த்த நிலையில் சிறைக் காவல் நீட்டிப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.