கடல் கொந்தளிப்பு: இரு படகுகள் சேதம்
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் பகுதியில் வீசிய சூறாவளியால் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு இரு படகுகள் கரை ஒதுங்கி சேதமடைந்தன.வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் இரு நாட்களாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் பகுதியில் மணிக்கு 40 முதல் 45 கி.மீ., வேகத்தில் சூறாவளி வீசியதால் ராமேஸ்வரம் பகுதியில் கடலில் கொந்தளிப்பு ஏற்பட்டு ராட்சத அலைகள் எழுந்தன.இதனால் ராமேஸ்வரம் ஓலைக்குடா, மண்டபம் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த லாரன்ஸ், பூமி ஆகியோரது நாட்டுப்படகு, விசைப்படகின் நங்கூரக் கயிறு அறுந்து கரையில் ஒதுங்கி சேதமடைந்தது. இதில் நாட்டுப்படகு இரண்டு துண்டாக உடைந்ததால் உரிமையாளருக்கு ரூ. 3 லட்சம் இழப்பு ஏற்பட்டது.மேலும் விசைப்படகை மண் அள்ளும் இயந்திரம் உதவியுடன் 2 படகுகள் கயிறு கட்டி இழுத்தன. இப்படகை பழுது நீக்க ரூ. 2 லட்சம் செலவாகும் என மீனவர்கள் தெரிவித்தனர்.