| ADDED : நவ 21, 2025 04:23 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பின்புறம் 1990ல் கட்டப்பட்ட வீட்டுவசதி வாரிய குடியிருப்பு வீடுகள் சேதமடைந்து அகற்றப்படாமல் உள்ளது. அவ்விடத்தை சமூக விரோதிகள் மது, கஞ்சா அருந்தும் இடமாக்கியுள்ளனர். போதை ஆசாமிகளால் அவ்வழியாக செல்லும் மாணவிகள், பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது. எனவே பழைய கட்டடத்தை உடனடியாக இடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். ராமநாதபுரத்தில் 1990ல் கலெக்டர் அலுவலக முகாம் அலுவலகம் அருகிலும், 1993ல் மூலக்கொத்தளம், பட்டணம்காத்தான் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வீட்டுவசதி வாரியம் மூலம் வீடுகள் கட்டப்பட்டு கடைநிலை அரசு ஊழியர் முதல் அதிகாரிகள் வரை அரசு நிர்ணயித்த வாடகையை செலுத்தி குடியிருந்தனர். இந்த வீடுகள் அனைத்தும் சேதமடைந்து இடிந்து விழத் துவங்கியதால் 2015ல் மக்கள் இங்கு வசிக்க வேண்டாம் என வீட்டு வசதி வாரியத்தால் அறிவிப்பு செய்யப்பட்டது. அனைவரும் வீட்டை காலி செய்தனர். பட்டணம்காத்தான் டி-பிளாக் ரோட்டில் கலெக்டர் அலுவலகம் அரசு மருத்தவக்கல்லுாரி மருத்துவமனையின் பின்புறத்தில் குடியிருப்பு கட்டடங்கள் பயன்பாடில்லாமல் சேதமடைந்த நிலையில் அகற்றப்படாமல் உள்ளன. அவ்விடத்தை சுற்றிலும் சீமைக்கருவேலமரங்கள் அடர்ந்து வளர்ந்தும், கழிவுநீர், குப்பை கொட்டும் இடமாகியுள்ளது. இரவு நேரத்தில் சமூக விரோதிகள் கஞ்சா, மது அருந்தும் இடமாக பயன்படுத்துகின்றனர். அருகில் அரசு மருத்துவக்கல்லுாரி செயல்படுவதால் போதை ஆசாமிகள் நடமாட்டம் காரணமாக மாணவிகள் மற்றும் இரவில் அலுவலக பணி முடிந்து செல்லும் பெண்களின் பாதுகாப்பு கேள்விகுறியாகியுள்ளது. எனவே கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் பழைய கட்டடங்களை இடித்து அப்புறப்படுத்த வேண்டும். அதற்கு கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் உத்தரவிட வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.